துணை ஜனாதிபதி ஆனபோது கண்ணீர் விட்டேன்.. எதற்காக தெரியுமா.. வெங்கையா நாயுடு விளக்கம்!
சென்னை: துணை ஜனாதிபதி ஆனபோது கண்ணீர் விட்டேன் என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெங்கையா நாயுடு ஏற்புரை வழங்கி பேசினார்.
ஓய்வு
அப்போது அவர் பேசுகையில் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளதற்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் அமித்ஷா கட்சியை சேர்ந்தவர் அல்ல. அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன்.
நினைத்ததில்லை
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் பொதுப் பணியில் சோர்வடைந்து விடவில்லை. துணை குடியரசு ஆவேன் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.
கண்ணீர்
துணை ஜனாதிபதியாக பதவியேற்றபோது கண்ணீர் விட்டேன். மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் கண்ணீர் விடவில்லை. ஒரு விவசாயியின் மகன் துணை ஜனாதிபதியாக உயர் பதவியில் அமர்வதை எண்ணி கண்ணீர் விட்டேன்.
கனத்த இதயம்
துணை ஜனாதிபதி ஆவதால் இனி பாஜக தலைமை அலுவலகத்துக்கு செல்ல முடியாததை எண்ணி வருந்தினேன். வாழ்க்கையின் உச்சத்தை தந்த பாஜக அலுவலகத்தை நினைத்து கனத்த இதயத்துடன் வெளியேறினேன்.
தமிழகம்
ஆந்திராவில் வாஜ்பாய் வருகை அறிவிக்கும்படியாக சுவற்றில் எழுதினேன். ஆனால் பிற்காலத்தில் வாஜ்பாயுடன் ஒரு தலைவராக அமர்ந்திருந்தேன். இந்தியாவில் அனைத்து வழிகளிலும் வளர்ந்து வருவது தமிழகம்தான்.
படிப்பறிவு இல்லை
இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நம்மை பாதுகாக்கும் என்பதை உணர வேண்டும். 72 ஆண்டுகளாகியும் 20 சதவீத மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
நேரடி மானிய திட்டம்
மக்கள் எந்த சேவைக்காகவும் வரிசையில் நிற்க கூடாது. லைனில் நிற்பதை தவிர்த்து ஆன்லைன் ஆக வேண்டும். லஞ்ச, ஊழலை அறவே தடுத்த எல்லா சேவைகளும் ஆன்லைன் ஆக வேண்டும். நேரடி மானிய திட்டம் பயன்படுத்தப்பட வேண்டும்.
அமைச்சர்
வளர்ச்சி என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்ற வழக்குகள் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால கட்டத்தில் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தேர்தல் வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடுகிறது. ஒரு கட்சி சார்பில் வென்றவர்கள் மறு கட்சியில் இணைந்து அமைச்சராவது தடுக்கப்பட வேண்டும் என்றார்.