எந்த மொழியையும் திணிக்க கூடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அழுத்தமாக சொன்ன வெங்கையா நாயுடு
சென்னை: எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
கருணாநிதி கைதான போது! துடிதுடித்த வெங்கையா நாயுடு என்ன செய்தார் தெரியுமா? துரைமுருகன் ருசிகரத் தகவல்
கலைவாணர் அரங்கம்
சிலைத் திறப்பு விழாவின் நிகழச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசுகையில் இந்தியாவில் பெருமைமிகு முதல்வர்களில் ஒருவர் கருணாநிதி. என்னுடைய இளம் வயதில் கருணாநிதியின் உரைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்கள்
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய அரசியல் பயணத்தில் மிக நீண்ட காலம் கருணாநிதியுடன் பயணித்திருக்கிறேன்.
நெருக்கமான இடம்
சென்னை என்னுடைய மனதிற்கு நெருக்கமான இடமாகும். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குறள் கருணாநிதிக்கு பொருந்தும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாகக் கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கருணாநிதி.
தாய்மொழி
தாய்மொழி, தாய்நாடு ஆகியவைவே மிகவும் முக்கியமானது. எந்த மொழியையும் திணிக்க கூடாது, எந்த மொழியையும் எதிர்க்க கூடாது என்பது எனது கொள்கை. தாய்மொழி மீது அனைவருக்கும் பற்றுதலும், அன்பும் இருக்க வேண்டும். தாய்மொழியின் வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தாய்மொழியில் பேசுங்கள்
உங்களுடைய வீடுகளில் தாய்மொழியிலேயே பேசுங்கள். மம்மி.. டாடி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். அம்மா... அப்பா என்று இதயத்தில் இருந்து பெற்றோர்களை அழையுங்கள். பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றாலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். தமிழ், தமிழ் காலச்சாரத்தை பெரிய அளவில் ஊக்குவித்தவர் கருணாநிதி.
ஆடை அணிவது
நான் ஆடை அணிவது பற்றி பலரும் பேசுகின்றனர்.. வேஷ்டி சட்டை அணிய நான் மிகவும் விரும்புகிறேன். உலக நாடுகள் பலவற்றிக்குப் போனாலும் நான் இந்த உடையை உடுத்துகிறேன். பல நாட்டு மக்களும் என்னுடைய உடையை பாராட்டுகின்றனர். தமிழக மக்கள் தங்களின் கலை, கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றுகின்றனர். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. எனது மொழிக்கு நான் ஆதரவானவன். விவசாயிகள் நலனுக்காக உழவர் சந்தையை நிறுவியவர் கருணாநிதி. கருணாநிதியின் முழு உருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி.
என்னை அழைத்தமைக்கு நன்றி
என்னுடைய பல நண்பர்களை இந்த விழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதுதான் கலாச்சாரம் இதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா. கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம் என்று கூறி சிறப்பு உரையை முடித்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் போராடி வரும் நிலையில் வெங்கையா நாயுடு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.