நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் அணைகள் நிரம்பி உபரிநீர் ஆறுகளில் வெளியேற்றப்படுகிறது. பல ஊர்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த ஆறு நாட்களாக உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 22 செமீ மழை பதிவாகியுள்ளது. இது அதிகனமழை அளவாகும். இதே போல அவலாஞ்சியில் 19 செமீ மழையும், கூடலூர் பஜார் பகுதியில் 17 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சோலையாறு பகுதியில் 12 செமீ மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. வால்பாறை, சின்கோனா, பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை தாலுகா அலுவலகம், தேவால, மேல் கூடலூர் பகுதிகளில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. பெரியார், எமரால்டு பகுதிகளில் தலா 7 செமீ மழையும், நடுவட்டம், உதகமண்டலம் பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்..26 மாவட்டங்களில் அடி தூள் - குடை அவசியம் மக்களே!
தென்மேற்குப் பருவமழை
மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
4 நாட்களுக்கு மழை
நாளை முதல் 13ஆம் தேதி வரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானம் மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 11ஆம் தேதி வரைக்கும் கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.