இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஓரளவுக்கு வெப்பம் தணிந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. கும்பகோணத்தில் பரவலாக நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.
கொட்டித் தீர்த்த மழை
வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கனமழையால் மகிழ்ச்சி
நாகை மாவட்டத்திலும் பரவலாக கன மழை பெய்தது. நாகூர், கீழ்வேளூர், தேவூர் சிக்கல், திருக்குவளை, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பம் தணிந்தது
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 4ம் நாளாக இடியுடன் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மிக கனமழை பெய்யும்
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமானது வரை
சென்னையை பொறுத்தவரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.