75வது சுதந்திர தின விழா.. வீட்டில் தேசிய கொடி ஏற்றும் மக்களே! இந்த விஷயங்களை முக்கியமாக கவனியுங்க!
சென்னை : நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று மூவர்ண கொடி பறக்கவிடப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் தேசிய கொடியை ஏற்றும் போது என்ன செய்ய வேண்டும், எப்படி பறக்க விட வேண்டுமென்பதும் மிக அவசியம்.
200 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்கள் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா பல்வேறு தியாகங்கள் போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அதனை ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் அதாவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று முதல் 3 நாள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றனும்! சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு
பிரதமர் மோடி
இந்த நிலையில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 31ஆம் தேதி 91 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் அப்போது சுதந்திர தின அமுதப் பெருவிழா மக்கள் பேரியக்கமாக வடிவெடுத்து இருப்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின்படி ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
75வது சுதந்திர தினம்
இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவர்ணக் கொடியைப் பறக்க விடுங்கள் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பொதுமக்களுக்கு வீடு வீடாக கொடிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று முதல் பலர் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேசியக் கொடியை ஏற்றும் போது என்னென்ன விதிமுறைகள் இருக்கிறது எப்படி பறக்க விட வேண்டும் என்பது மிக முக்கியமானது.
செய்யக்கூடாது
மிக முக்கியமாக தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றக்கூடாது. தேசியக் கொடியைவிட உயரமாக வேறு எந்த கொடியும் பறக்கக் கூடாது. தேசியக்கொடி பறக்கும் கொடிக் கம்பத்திற்கு மேல் பூக்கள், மாலைகள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது. தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது
மிகக் கவனம்
தேசியக் கொடி தரையில் விழவோ, நீரில் மிதக்கவோ கூடாது. தேசியக் கொடி கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது. தேசியக் கொடியை உரையாளரின் மேசை மீது விரிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது. மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகளில் அச்சிட்டு தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.