கூட்டணி வைக்க நாங்க ஏதோ ரஜினி வீட்டு வாசல்ல கியூல நிக்கிற மாதிரி பேசறாரே இவரு!.. வெற்றிவேல் ஆவேசம்
சென்னை: ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க யாரும் அவரது வீட்டில் காத்திருக்கவில்லை என தமிழருவி மணியனுக்கு வெற்றிவேல் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் கூறுகையில் ரஜினியின் அரசியல் குறித்து பேசுவதற்கு தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது. அவர் என்ன ரஜினியின் செய்தித் தொடர்பாளரா?
தாங்கள் அமைத்த கூட்டணி தான் அமோக வெற்றி பெறுகிறது என மொட்டையாக எதையும் பேசக் கூடாது. ரஜினி காட்சி ஆரம்பிப்பது குறித்து அவர்தான் பேச வேண்டும்.
தினகரன்
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரா. இல்லை காந்திக்கு பேரனா. தமிழருவி மணியன் நல்லவனாக இருக்கலாம். அதற்காக அவர் எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லக் கூடாது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க அவர் விரும்பவில்லை என்பதை இவர் எப்படி சொல்லலாம்?
ரஜினியின் குரல்
ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பதற்காக அவர் வீட்டு வாசலில் நாங்கள் காத்திருக்கவில்லை. அதுகுறித்து ரஜினி முடிவு செய்ய வேண்டும். அல்லது அமமுக தலைமை முடிவு செய்ய வேண்டும். இடைத்தரகர் தமிழருவி மணியன் பேசக் கூடாது. ரஜினியின் செய்தி தொடர்பாளராக இவர் அறிவிக்கப்பட்டால் தமிழருவி மணியன் சொல்வது ரஜினியின் குரலாக இருக்கும்.
பாமக
ரஜினியோடு சேர்வதற்கு பாமக முன்வரும் என தமிழருவி மணியன் எப்படி சொல்ல முடியும்? தமிழருவி மணியன் அதிகப்பிரசங்கி போல் எதையும் செய்ய கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள் என வெற்றிவேல் மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குகிறார் என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
டிடிவியுடன் கூட்டணி இல்லை
இதுகுறித்து அவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பாமகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க வாய்ப்புண்டு. அதே வேளையில் டிடிவி தினகரனுடன் அவர் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அவ்வாறு வைத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுகிறார் என தமிழருவி தெரிவித்திருந்தார்.