மக்களவை தேர்தல் தோல்வி அதிமுக-விற்கு வைக்கப்பட்ட திருஷ்டி பொட்டு.. ஓபிஎஸ் அடடே விளக்கம்
சென்னை: 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்த அதிமுக-விற்கு மக்களவை தேர்தலில் தோல்வியை கொடுத்து, மக்கள் திருஷ்டி கழித்துள்ளனர் என துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நிதி மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது பேசிய அவர் உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.
மேலும் தமிழகத்தில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்த சாதனையை கூட அதிமுக செய்து காட்டியுள்ளது. இப்படி பல வெற்றிகளை குவித்த அதிமுக-விற்கு, திருஷ்டி கழிக்கும் வகையில் மக்களவை தேர்தல் முடிவை மக்கள் வழங்கியுள்ளனர்.
அழகாக இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம். அதே போல தான் கடந்த 2011-ம் ஆண்டு துவங்கி தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிகளை குவித்த அதிமுக-விற்கு, 2019 மக்களவை தேர்தலில் மக்கள் திருஷ்டி கழித்துள்ளனர்.
இருப்பினும் தேனி தொகுதியை மட்டும் நாங்கள் விட்டுவிடவில்லை என்றார். மக்களவை தேர்தல் முடிவுகளை கண்டு தாங்கள் வருந்தவில்லை என்றும், திருஷ்டி பொட்டாகவே பார்ப்பதாகவும் பேசினார் ஓபன்னீர்செல்வம்.
மக்களவை தேர்தல் முடிவுகளால் அதிமுக-விற்கு ஏற்பட்ட திருஷ்டி கழிந்திருக்கும். எனவே அடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் ஹாட்ரிக் சாதனையை படைக்கும் என்றார் ஓபிஎஸ்.