அடக் கொடுமையே.. இப்படியும் நடக்குமா.. இனி செவ்வாழை வாங்கும்போது உஷார்.. வைரல் வீடியோ
சென்னை: உணவுப் பொருள் கலப்படம் என்பது ஒரு பெரிய குற்றம். அதிலும் சிறியவர் முதல், பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய பால், பழம் போன்ற பொருட்களில் செய்யக்கூடிய கலப்படம் என்பது மன்னிக்க முடியாத குற்றம்.
அப்படியான ஒரு கலப்படம் தொடர்பான வீடியோ இப்போது வைரலாக சுற்றிவருகிறது. உணவுப் பொருட்களில் எத்தனையோ வகையான கலப்படங்களை நாம் இதற்கு முன்பாக பார்த்திருப்போம். ஆனால் இது மிக மிக நூதனமாக இருக்கிறது, இப்படியும் நடக்க முடியுமா என்று அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
அப்படி என்ன கலப்படம் என்கிறீர்களா? சாதாரண நாட்டு வாழைப்பழத்தை கலர் பூசி, செவ்வாழை பழம் என்று விற்பனை செய்ய தொடங்கியுள்ளது ஒரு கும்பல்.
சோப்பு தண்ணீர்
இது தொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில் செவ்வாழைப் பழம் போன்று இருக்கக்கூடிய ஒரு வாழைப்பழத்தை ஒருவர் எடுத்து சோப்பு போட்டு அதன் தோலை தண்ணீரால் கழுவி விட, அதிர்ச்சியளிக்கும் விதமாக தோலில் உள்ள சிவப்பு வண்ணம் கலைந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்க ஆரம்பித்தது. இப்படித்தான் நடக்கிறது செவ்வாழை மோசடி என்று முடிகிறது அந்த வீடியோ.
ஏன் செவ்வாழை
செவ்வாழை மற்ற வாழைப்பழங்களை விடவும் உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதாலும், அரிதாகக் கிடைக்கக் கூடியவை என்பதாலும், அதற்கு விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அதிக காசுக்கு ஆசைப்பட்டு இவ்வாறு மோசடி நடப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த நெட்டிசன்.
நாட்டு முட்டை
சாதாரண முட்டையையும் நாட்டுக்கோழி முட்டை என்று கூறி விற்பனை செய்வதற்காக கலர் பூசுவதை போன்ற ஒரு டெக்னிக் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோவில் மற்றொரு ஐயப்பாடும் இருக்கிறது.
சந்தேகம்
பழத்தோலின் ஒரு பகுதியில் ஆங்காங்கே பழம் காய்ந்தால் ஏற்படக்கூடிய கருப்பு நிறமும் காட்சி தருகிறது. எனவே மொத்தமாக கலர் ஊற்றி வண்ணம் மாற்றியிருக்க முடியாது என்பது தெரிகிறது. ஒவ்வொரு பழமாக எடுத்து கலர் அடித்தால்தான் இவ்வளவு பர்பக்ஷன் சாத்தியம்.
|
நடவடிக்கை தேவை
எனவே வீடியோ வைரலாக வேண்டும் என்று நோக்கத்திற்காகவும் இவ்வாறு செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எது எப்படி இருந்தாலும் உண்மையில் இது போல செவ்வாழைக்கு வண்ணம் பூசி ஏமாற்றும் கும்பல் நடமாடினால், அரசு தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக இருக்க முடியும்.