மனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா? 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்
சென்னை: பெண்களை பாதிக்கும் மனுசாஸ்திரத்தை திருத்தி எழுத வேண்டாமா? என 36 ஆண்டுகளுக்கு முன்னர் சக்கைபோடு போட்ட விதி திரைபடத்தின் நீதிமன்ற வசன காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனுதர்மத்தில் பெண்கள் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை திருமாவளவன் விளக்கிய விவகாரம் விஸ்வரூபமாகிவிட்டது. இந்து பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருமாவளவனை கண்டித்து பாஜகவின் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் திருமாவளவன் தரப்போ, பெண்களை இழிவு செய்யும் மனுதர்மத்தை தடை செய் என்கிற முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே 36 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வெற்றிகரமாக ஓடிய விதி திரைப்படத்தின் புகழ்பெற்ற நீதிமன்ற விவாத காட்சியை இப்போது மனுதர்ம எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அந்த படத்தில் நீதிமன்றத்தில் வக்கீல் சகுந்தலாதேவி (மூத்த நடிகை சுஜாதா) தமது வாதத்தில், ஆண்களுடைய கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகித்தான் தீர வேண்டும் என விதி இருந்தால் அந்த விதியை ஒழுங்குபடுத்த வேண்டாமா?
மண்புழுக்களாக இருக்கும் பெண்களை பாதிக்கக் கூடிய மனுதர்மம், மனுநீதி, மனு சாஸ்திரம் இவைகளை திருத்தி எழுத வேண்டாமா? என்று கேட்டிருப்பார். இப்போது இந்த வீடியோவைத்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.