டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என வலியுறுத்தி... விடுதலை சிறுத்தைகள் இன்று போராட்டம்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி இன்று மே 6-ம் தேதி காலை 11மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று ''டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம்'' என முழக்கம் எழுப்ப வேண்டும் என திருமாவளன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் மக்கள் விரோத முடிவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு அவரவர் வீடுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என முழக்கம் எழுப்ப வேண்டும் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். ''தமிழக அரசே, மதுபானக் கடைகளைத் திறக்காதே! மக்களைக் கொல்லத் துணியாதே! கொரோனா பரவச் செய்யாதே! குடிகெடுக்க முனையாதே!'' என்ற முழக்கத்தை அனைவரும் வீட்டு வாசலில் நின்று ஓங்கி ஒலிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிக்கைகள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், முதல் நபராக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் திருமாவளவன். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு தேசிய அளவில் ஒரு அரசியல் கட்சி முதல்முறையாக முன்னெடுக்கும் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.