பாம்பும் சாகாமல்... தடியும் உடையாமல்... என்ன சொல்ல வருகிறார் ரஜினி -திருமாவளவன் கேள்வி
சென்னை: மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து, பாம்பும் சாகாமல் தடியும் உடையாமல் இருக்க வேண்டும் என்பதை போல் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கனவை தமிழக அரசு மறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்வீட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்தை விமர்சித்துள்ள திருமா, மதுக்கடைகள் விவகாரத்தில் ரஜினிகாந்தால் வெளிப்படையாக கருத்துச்சொல்ல முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய "டாஸ்மாக்" காரணமா?.. இன்றிலிருந்து தெரிய வரும்!
ரஜினி ட்வீட்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7-ம் தேதி திறக்கப்பட்டன. தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு முடிவைக் கண்டித்து முதல் ஆளாக போராட்டத்தை அறிவித்தவர் திருமாவளவன். அதற்கு பின்னர் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இணைந்து டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கருப்புச் சின்னம் அணிந்து போராட்டம் நடத்தின. மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி பாமக, மக்கள் நீதி மய்யம் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் செப்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர்.
திடீர் சீற்றம்
இதனிடையே மதுக்கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இப்போது அந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இந்த சூழலில் ரஜினி நேற்று வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை தமிழக அரசு மறந்துவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமா, அரசை ரஜினி கண்டிக்க விரும்புகிறாரா அல்லது நட்பு பாராட்ட வேண்டும் என விரும்புகிறாரா எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
தயக்கம்
டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்றும், அது மக்களுக்கு செய்கிற துரோகம் எனவும் ரஜினியால் வெளிப்படையாக கருத்து கூற முடியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரஜினி வரவேற்காதது பற்றியும் திருமா சுட்டிக்காட்டியுள்ளார். மதுக்கடை விவகாரம் பற்றி கருத்து கூறுவதில் ரஜினியிடம் தயக்கம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
பாம்பும் சாகாமல்
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகள் குறித்து ரஜினி நேற்று வெளியிட்டுள்ள கருத்து, பாம்பும் சாகாமல் தடியும் உடையாமல் இருக்க வேண்டும் என்பதை போல் உள்ளதாக திருமா விமர்சித்திருக்கிறார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது குறித்து ரஜினி இன்னும் வெளிப்படையாக தமது கருத்தை கூற வேண்டும் என அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.