கேட்டது 10; கிடைத்தது 6....அதிருப்தியில் தொண்டர்கள்...கூட்டணி வெற்றிவாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா?
சென்னை: எவ்வளவோ போராடி பார்த்த விசிக, கடைசியில் திமுக கொடுத்த 6 தொகுதிகளை வாங்க சம்மதித்தது.
Recommended Video
இந்த 6-ல் திருப்தியில்லை. பாஜக ஒழிக்க நாம் திமுகவுடன் நீடித்துதான் ஆக வேண்டும். நமது சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர் திருமாவளவன்.
திருமாவளவன் மற்றும் விசிக தொண்டர்களின் இந்த அதிருப்தி திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
திணறி வரும் கட்சிகள்
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போதும் கூட்டணி பேச்சுவார்த்தையை சுலபமாக முடித்து விடும். ஆனால் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும். இது வழக்கம்தான். ஆனால் இந்த தேர்தலில் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க முடியாமல் திணறி வருவது அப்பட்டமாக தெரிகிறது.
திமுக-அதிமுக படும்பாடு
ஆளும் கட்சியான அதிமுக, பாஜக, பாமகவுடன் கூட்டணியை இறுதி செய்து பாமகவுக்கு தொகுதி 23 தொகுதிகள் கொடுத்தும் விட்டது. ஆனால் தேமுதிகவை இழுக்க அந்த கட்சி பெரும்பாடு பட்டு வருகிறது. தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்பதே இன்னும் சரியாக தெரியவில்லை. அதிமுகவைபோல் அல்லாமல் கூட்டணியை எளிதில் அமைத்துக் கொண்ட திமுக, கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டை முடிக்க படாதபாடு பட்டு வருகிறது.
விட்டுக் கொடுக்க மறுக்கும் காங்கிரஸ்
சிறிய கட்சிகளான முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும் கிள்ளி கொடுத்து விட்டு அவர்களை திருப்திபடுத்தியது திமுக. ஆனால் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை கேட்க, திமுக அதற்கு மறுப்பு தெரிவிக்க பேச்சுவார்த்தை ஜவ்வாக இழுத்து வருகிறது. ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த காங்கிரசும், மக்கள் நீதி மய்யத்துடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சி அளித்த விசிக
காங்கிரஸ் முதலில் முரண்டு முடிக்கும்; பின்னர் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொள்ளும் என்பது திமுகவுக்கு நன்றாக தெரிந்ததுதான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கொடுத்த தொகுதிகளை ஏற்க மறுத்து அடம்பிடித்தது திமுக எதிர்பாராத ஒன்றாகும். திமுகவிடம் முதலில் 10 தொகுதிகளை கேட்டது விசிக. பத்து எல்லாம் ரொம்ப ஓவர். அதிகபட்சம் 4 வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக கிள்ளிக் கொடுக்க படு அப்செட்டானது திருமாவளவன் தரப்பு.
அதிருப்தியில் திருமாவளவன்
இந்த அதிருப்தியை திமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் அப்படியே வெளிப்படுத்தினார் திருமா. வழக்கமாக கொடுத்ததை வாங்கிக் கொண்டு கிளம்பும் விசிக, இந்த முறை முரண்டு பிடித்தது கண்டு ஸ்டாலினே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துதான் போனார். இதனை தொடர்ந்து கொஞ்சம் இறங்கி வந்த அறிவாலய தரப்பு இறுதியில் 6 தொகுதியை தருவதாக கூறியது. உடனடியாக அறிவாலயத்துக்கு வாருங்கள் என்று திருமாவுக்கும் போன் பறந்தது.
கடைசியில் 6-க்கு சம்மதம்
இந்த தகவல் விசிக தொண்டர்களுக்கு தெரியவர, திமுக 8 கொடுத்தால் வாங்குங்கள் இல்லை என்றால் கூட்டணியே வேண்டாம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது திருமாவளவனே எதிர்பாராத ஒன்று. ஆவேசம் அடைந்த தொண்டர்களை சமாதானப்படுத்திய திருமா, இறுதியில் வேறு வழியின்றி திமுக கொடுத்த 6 தொகுதிகளை வாங்க சம்மத்தித்தார். இந்த 6-ல் திருப்தியில்லை. பாஜக-வை ஒழிக்க நாம் திமுகவுடன் நீடித்துதான் ஆக வேண்டும். நமது சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர் திருமாவளவன்.
கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?
திருமாவளவன் மற்றும் விசிக தொண்டர்களின் இந்த அதிருப்தி திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது ஒரு கட்சிக்கு திருப்திபடும் வகையில் சீட் கிடைத்தால் அந்த கட்சியின் தொண்டர்கள் தங்களது கட்சிக்கு மட்டுமல்லாது, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து வேலை செய்வார்கள். தற்போது திமுக மீதுள்ள அதிருப்தியால் இனிமேல் விசிகவுக்கு ஒதுக்கப்படும் 6 தொகுதிகளுக்கு மட்டும் அந்த கட்சியின் தொண்டர்கள் வேலை செய்யும் நிலை உள்ளதாகவும், விசிக போட்டியிடாத மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வேலை செய்ய தொண்டர்களுக்கு ஆர்வம் இருக்காது என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
கூட்டணி வேட்பாளர்கள்
தற்போது விசிக தனி சின்னத்தில் வேறு போட்டியிடுவதால் திமுகவின் மற்ற கூட்டணி வேட்பாளர்களை விசிக தொண்டர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. விசிக தொண்டர்களின் அதிருப்தி திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது மே 2-ம் தேதி தெரிந்து விடும்.