நெய்வேலியில் 3வது நாளாக குவிந்த ரசிகர்கள்.. மாஸ் செல்ஃபியுடன் தேங்ஸ் சொன்ன விஜய்.. டுவிட்டரில்!
Recommended Video
சென்னை: நெய்வேலியில், மாஸ்டர் படப் பிடிப்பு நடைபெற்றுவரும் பகுதிக்கு, இன்று 3வது நாளாக விஜய் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். டுவிட்டரில் நெய்வேலிக்கு நன்றி என தெரிவித்துள்ளார் விஜய்.
நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது விஜய் ரசிகர்கள் பலருக்கும் தெரியால் இருந்தது. ஆனால் வருமான வரித்துறையினர், நெய்வேலி வந்து விஜயை சென்னை அழைத்துச் சென்று விசாரித்தபோதுதான், பலருக்கும் சூட்டிங் அங்கு நடந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி பாஜகவினர் அங்கு வருகை தந்து, சூட்டிங்கை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் திரளாக வந்து பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அந்த போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இதன் பிறகு தினசரி விஜய் ரசிகர்கள் நெய்வேலி வருகைதர தொடங்கியுள்ளனர். நேற்று ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்ததால், வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் விஜய்.
விஜய் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை அறிந்து கொண்டதால், நேற்றைவிட இன்று அதிக ரசிகர்கள் நெய்வேலி சுரங்க வாசல் பகுதிக்கு விரைந்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குவிந்து விஜய் எப்போது வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தனர். இன்று விஜய் தங்களை, சந்திப்பார் அல்லது ரசிகர்களுடன் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது.
நிலக்கரி சுரங்கம் பகுதி ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. விஜய் ரசிகர்கள் வருகை காரணமாக கூடுதலாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு 7.15 மணியளவில், விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், நேற்று வேன் மீது ஏறி நின்று எடுத்த செல்பி படத்தை பகிர்ந்ததோடு, நன்றி நெய்வேலி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள். #ThalapathyVIJAYselfie என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தில் டுவிட்டரில் டிரெண்ட்டாகி வருகிறது.
எனவே மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நிறைவடைந்துவிட்டது என தெரிகிறது. வருமான வரி சோதனை மற்றும் பாஜகவினரின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக இப்போது விஜய் ரசிகர்கள் அதிகளவு வருகை தந்து அவருக்கு சூட்டிங் முடிந்ததும் உற்சாகமாக வழியனுப்பி வைப்பது என்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் விஜய் ரசிகர்கள் வருமான வரித்துறைக்கும், பாஜகவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.