சென்று வா வெற்றி நமதே...விஜயகாந்த் ஆசியுடன் களமிறங்கும் விஜயபிரபாகரன் - வெற்றி கிடைக்குமா?
தேமுதிக தொண்டர்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொண்டர்கள் விரும்புவதால் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: தொண்டர்கள் விரும்புவதால் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாக விஜயகாந்த், பிரேமலதாவின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். கேப்டன் சென்று வா வெற்றி நமதே என்றார் அவரது ஆசியுடன் நான் எந்த தொகுதியில் நின்றாலும் என்னை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு என ஆளும்கட்சி முகாமிலும் எதிர்கட்சி முகாமிலும் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணலும் நடந்து வருகிறது.
கூட்டணியா தனித்து போட்டியா
அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கூறப்பட்டாலும் இதுவரைக்கும் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் எதுவும் இறுதிச்செய்யப்படவில்லை. 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விருப்பம் தெரிவித்து தேமுதிக பட்டியல் கொடுத்திருந்தாலும் 14 தொகுதிகள் மட்டுமே அதிமுக கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
வாயை விட்ட எல்.கே சுதீஷ்
நிர்வாகிகள் மத்தியில் பேசிய எல்.கே. சுதீஷ், தேமுதிகவிற்கு இப்போதும் செல்வாக்கு இருக்கிறது கூட்டணிக்காக நாங்கள் கெஞ்சவில்லை என்று கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு அதிமுக தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டால் அதிமுக கட்சியே இல்லாமல் போயிருக்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விருப்பமனு விறுவிறுப்பு
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் தேமுதிகவில் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா தொகுதி குறிப்பிடாமல் மனு அளித்துள்ளார். இதே போல போட்டியிடும் தொகுதி குறிப்பிடாமல் விருப்பமனு அளித்துள்ளார் விஜயபிரபாகரன்.
விஜயகாந்த் ஆசி
விருப்பமனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், தொண்டர்கள் விரும்புவதால் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். விருப்பமனு தாக்கல் செய்யப் போவதாக அப்பாவிடம் கூறிய உடன், சென்று வா வெற்றி நமதே ஆசி வழங்கியதாக கூறினார்.
ஜெயிக்க வைப்பார்கள்
நான் எந்த தொகுதியில் நின்றாலும் என்னை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி முடிவை கட்சி மூத்த நிர்வாகிகள் தான் எடுப்பார்கள். நான் விருப்பமனு தாக்கல் மட்டுமே செய்துள்ளேன் என்றார்.
தேமுதிகவில் நேர்காணல்
தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 6,7,8ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேர்காணல் நடத்துவார் என்றும் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். அதிமுக உடன் கூட்டணி நீடிக்கிறதா? அல்லது தேமுதிக தனித்து களமிறங்கப்போகிறதா? என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடாமலேயே விருப்ப மனு தாக்கல் செய்யும் பணிகளும் நேர்காணலும் தேமுதிகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.