ஐடி ரெய்டு.. ரஜினியின் வழவழா பேச்சு.. மாஸ்டர் ஆடியோ ரிலீஸில் மாஸ் ஆக வெடிக்கப் போகிறாரா விஜய்?
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ் என்பது சினிமா சார்ந்த நிகழ்ச்சியாக இருக்கப் போகிறதா? அல்லது அரசியல் ஆடுகளத்துக்கு தீனி போடப் போகிறதா? என்பது சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் நடிகர்களை சுற்றிய அரசியல் படுதீவிரமடைந்துள்ளது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த நடிகர் ரஜினிகாந்தை வீம்பாக களத்தில் இறக்கிவிட்டனர்.
மத்தவங்க ஏதாவது சொன்னா, வடிவேலு மீம்ஸ வச்சி கிண்டல் பண்றீங்க.. ரஜினி சொன்னா வடிவேலே கிண்டல் பண்றாரு
எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்
அரசியலில் தம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் 2 ஆண்டுகள் பம்மிக் கொண்டே இருந்தார். இதற்கு மேலும் பம்மினால் படங்களும் படுத்துவிடும் என்பதால் புரட்சி- எழுச்சி வந்தால் நானும் அரசியலுக்கு வருவேன் என தலைதெறிக்க வேறுதிசையை நோக்கி சென்றுவிட்டார்.
வருமான வரித்துறை சோதனை
அதேநேரத்தில் நடிகர் விஜய்யை இலக்கு வைத்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை, நெய்வேலியில் விஜய் படப் பிடிப்பு நிறுத்தம், சென்னைக்கு வர வழைக்கப்பட்டு சோதனை என விஜய்யை சுற்றி ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
விஜய் சம்பளப் பட்டியல்
இதன் உச்சமாக நடிகர் விஜய்-ன் சம்பளப் பட்டியலையும் கூட வருமான வரித்துறை வெளியிட்டது. விஜய்யை விட அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளப் பட்டியல் ஏன் வெளியிடப்படவில்லை என்கிற கேள்விக்கும் விடை இல்லை. ஆனால் இன்னொரு பக்கம் நெய்வேலியில் விஜய்க்கு அமைதியான முறையில் அவரது ரசிகர்கள் காட்டிய ஆதரவு என்பது எளிதில் கடந்துவிட்டு போகக் கூடியதும் இல்லை.
மாஸ்டர் ஆடியோ ரிலீஸ்
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், அரசியல் ஆடுகளத்துக்கு வர அச்சப்பட்டு ஒதுங்குகிறார். இளைய தளபதி விஜய்யோ வம்படியாக அரசியல் களத்துக்குள் இழுத்துவிடப்படுகிறார். இதனைத்தான் அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடைபெறுகிறது.
விஜய் பேசப் போவது என்ன?
இதில் நடிகர் விஜய் என்ன பேசுவார்? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. தம்மை சீண்டுகிறவர்களுக்கு பதிலடி தருவாரா? அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்ப சமிக்ஞைகளை வெளிப்படுத்துவாரா? என்கிற பட்டிமன்றம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடிகர் விஜய் பேசும் பேச்சுதான் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊடகங்களின் விவாதப் பொருளாகவும் இருக்கலாம்.