ஆஹா.. சர்கார் வில்லி கேரக்டரோட பெயரைக் கவனிச்சீங்களா.. கிளம்பும் அடுத்த சர்ச்சை!
Recommended Video
சென்னை : விஜய் நடித்து வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி என்பதை குறிப்பிட்டு மக்கள் சமூகவலைதளங்களில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரும் கோமளவள்ளி தான் எந்த நோக்கத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரக் கூடும் என்று அவ்வபோது தகவல்கள் கசிவதாலோ அல்லது சத்தமே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்து தோள் கொடுப்பதாலோ என்னவோ அவரின் திரைப்படங்கள் வெளிவருவதென்றால் சர்ச்சை மேல் சர்ச்சை வந்துவிடுகிறது. மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக இடம்பெற்றிருந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜக எதிர்ப்புக் கொடியை தூக்கியது.
மற்றொரு பக்கம் பாஜக மூத்தத் தலைவர் எச். ராஜா கோவிலை இடித்து மருத்துவமனை கட்ட வேண்டும் என்று விஜய் வசனம் பேசுவதாக குற்றம்சாட்டினார். ஏன் சர்ச்சை இடித்து கட்ட வேண்டும் என்று சொல்லாமல் கோவிலை இடித்து கட்ட வேண்டும் என்று விஜய் வசனம் பேசுகிறார் என்றும் அவர் பங்கிற்கு ஒரு சர்ச்சையை கிளப்பினார்.
[ஆள்வோர் ஏன் கோபப்படுகிறார்கள்? சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இவைதான்! ]
எச். ராஜா கிளப்பிய மத சர்ச்சை
இந்த பிரச்னையை இதோடு விட்டு விடாமல் விஜயின் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு அவரது வாக்காளர் அடையாள அட்டையையும் ட்விட்டரில் வெளியிட்டார். உண்மையில் மெர்சல் படத்தில் அப்படியான மத சாயலுடன் அந்த வசனம் இருக்காது, கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை போடும் போது ஏற்படும் விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் போனதற்கு மருத்துவமனை இல்லாததே காரணம் என்பதால் கோயிலுக்கு பதில் மருத்துவமனை கட்டுவோம் என்று வசனம் பேசி இருப்பார்.
அடுத்தடுத்த திருப்பங்கள்
மெர்சல் பிரச்னையை பாஜக ஊதி ஊதி பெரிதாக்க படக்குழு எதிர்பார்த்ததை விட அதிக விளம்பரம் கிடைத்து படமும் பைசா வசூல் செய்தது. இந்நிலையில் சர்கார் திரைப்படத்தில் கதை வேறொருவருடையது என்று தொடங்கிய பிரச்னை சுமூக பேச்சுவார்த்தை, சமரசம் செய்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா என்று அடுத்தடுத்து பல திருப்பங்களை ஏற்படுத்தியது.
அமைச்சர் எச்சரிக்கை
இந்த பிரச்னைகளெல்லாம் முடிந்து வெற்றிகரமாக தீபாவளி நாளான நேற்று திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் சர்காரில் தேவையற்ற சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். சர்கார் இப்போதைய அரசுக்கு பல சாட்டையடி கேள்விகளை தனது வசனங்கள், காட்சிகள் மூலம் முன்வைப்பதாகவும் படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி
இதில் புதிய சர்ச்சையாக கிளம்பி இருப்பது சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயரிடப்பட்டுள்ளதாம். இதுதற்செயலாக நடந்ததா, அரசியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டதா அல்லது அதிமுகவை சீண்டுவதற்காகவா, கதைக்கு தேவைப்பட்டதாலா என்று டிவி சேனல் விவாதம் நடத்தும் அளவிற்கு பிரச்னை பெரிதாகியுள்ளது.
அரசியல் உள்நோக்கமா
கோமளவள்ளி என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். தமிழ் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்த ஜெயராமன் வேதவள்ளி தம்பதிக்கு அவர்களின் குடும்ப வழக்கப்படி பாட்டியின் பெயரான கோமளவள்ளி சூட்டப்பட்டுள்ளது. விஜயை ஹீரோவாக காட்டும் படத்தில் கோமளவள்ளி என்ற பெயரில் வில்லி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.