இன்று விஜய்க்கு பின்னால் எவ்வளவு பேர் இருக்காங்க.. அதிரடி கருத்தை வெளியிட்ட கருணாஸ்!
Recommended Video
சென்னை: இன்று விஜய்க்குப் பின்னால் அந்த இடத்தில் மட்டும் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினார்கள். அத்துடன் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை காரிலேயே அழைத்து வந்து பனையூரில் உள்ள இல்லத்தில் வைத்து விசாரணையும் நடத்தினர்.
இதற்கிடையே விஜய் ரசிகர்கள், பாஜகவினரிடையே இந்த விவகாரம் சண்டையாக மாறியது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்
ரசிகர்களுடன் விஜய்
இந்த சூழலில் மீண்டும் நடிகர் விஜய் நெய்வேலி சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நேற்று அவர் பல்லாயிரம் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த படம் பல அர்த்தங்களை கற்பிப்பதாக பலரும் கருத்து கூறி வருகிறார்கள். விஜய் தனக்கு பின்னால் எத்தனை பேர் இருக்கிறார்கள் பாருங்கள் என்பதை காட்டும் விதமாக செல்பியை தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக போராட்டம்
இந்நிலையில் விஜய்க்கு எதிராக நடந்த வருமான வரி சோதனை மற்றும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்யின் செல்பி குறித்து நடிகர் கருணாஸ் பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறியதாவது: '' கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது.
வந்தவிட்டார்கள் ரசிகர்கள்
பாஜகவினர் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடத்திய போராட்டத்துக்குப் பின்புதான் பலருக்கும் நெய்வேலியில் ஷூட்டிங் நடப்பது தெரிந்திருக்கிறது. இதனால் அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். இன்று விஜய்க்குப் பின்னால் அந்த இடத்தில் மட்டும் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
கருணாஸ் விளக்கம்
நடிகர் ரஜினி காந்துக்கு வருமான வரித்துறையிலிருந்து விலக்கு அளித்துள்ளார்கள் ஆனால், விஜய்க்கு மட்டும் இவ்வளவு தூரம் கெடுபிடி ஏன் என்று கேட்கிறார்கள், ஆனால் ரஜினி சாருக்கு வருமான வரித்துறையில் விலக்குக் கொடுத்திருக்காங்களா என்று எனக்குத் தெரியாது. அப்படிக் கொடுத்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை.
பாஜக ஆதரவு பேச்சு
இந்தியாவில் ரஜினியும் மற்றவர்களை போல் ஒரு குடிமகன்தான். அவருக்கு மட்டும் வருமான வரித்துறையில் சலுகை கொடுத்துள்ளார்கள் என்று சொல்றதெல்லாம் அர்த்தமில்லாத பேச்சு. அண்மைக்காலமாக ரஜினி காந்தின் பேச்சுகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு சலுகை கொடுத்திருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டது
வருமான வரித்துறை சோதனை என்பது சட்டத்துக்கு உட்பட்டது. அதில் பெரியவர், சிறியவர் என்றொல்லாம் பார்க்க முடியாது. தனிப்பட்ட நடிகர் விஜய் மீது மட்டும் வருமான வரித்துறை சோதனை தொடுக்கப்படவில்லை. இந்தச் சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது " இவ்வாறு நடிகர் கருணாஸ் எம்எல்ஏ தனது பேட்டியின் போது தெரிவித்தார்.