"இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்.." விஜய் சேதுபதிக்கு வைரமுத்து கோரிக்கை
சென்னை: முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்காமல் விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும் என்று, கவிஞர் வைரமுத்து சூசகமாக வலியுறுத்தியுள்ளார்.
800 என்ற அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தமிழ்தேசியவாதிகளும், படைப்பாளிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வைரமுத்துவும், விஜய் சேதுபதிக்கு சூசகமாக ஒரு அறிவுரையை டுவிட்டர் வழியாக முன் வைத்துள்ளார்.
கொதிக்கும் ஈழ மக்கள்.. முத்தையா முரளிதரன் படத்தில் இதை எடுத்தால் பெரும் பிரச்சனையாக மாறும்!
வைரமுத்து ட்வீட்
வைரமுத்து கூறியுள்ளதாவது: கலையாளர் விஜய் சேதுபதிக்கு... சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி. இவ்வாறு விஜய் சேதுபதி டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜா
முன்னதாக, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால், பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க.
முரளிதரன் படம்
தாங்கள் செய்யவிருக்கும் '800' என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.
துரோகங்கள்
விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?. எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.
போராளியின் தியாகம்
எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது என்று பாரதிராஜா தெரிவித்திருந்தார்.