விஜய்க்கு ஏன் இந்த திடீர் குத்தல் குடைச்சல்.. காரணம் அதுவா.. பரபரக்கும் திரையுலகம்!
சென்னை: நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட சமீபத்திய குத்தல் குடைச்சலுக்கு ஒரு வலுவான பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொருவரின் வரவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்ற அச்சத்தில்தான் விஜய்க்கு ஸ்பீட் பிரேக் போட முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலும், சினிமாவும் காலம் காலமாக பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சினிமாவில் ஹீரோ, வில்லன் இருப்பது அரசியலிலும் உள்ளது. இதை பிரிக்க தமிழக மக்களும் விரும்புவதில்லை. அதிலேயே அவர்களும் ஊறிப் போய்க் கிடக்கின்றனர். அவர்களை மீட்கவும் யாரும் நினைப்பதும் இல்லை.
இந்த நிலையில்தான் அடுத்தடுத்து சினிமாவிலிருந்து ஏகப்பட்ட ஹீரோக்கள் அரசியல் அவதாரம் பூண்டு கொண்டுள்ளனர். அதுவும் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் போன பின்னர் சினிமாவைச் சேர்ந்த ஏகப்பட்ட பேருக்கு திடீர் தைரியம் வந்து, முறுக்கேறி, நாடி நரம்பு புடைக்க பேச ஆரம்பித்து விட்டனர். கண் முன்பு முதல்வர் நாற்காலி ஸ்லோ மோஷனில் வலம் வர ஆரம்பித்து விட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா.. இந்த குட்டி விஜபிக்கு மட்டுமே ஆத் ஆத்மி அழைப்பு!
ஆசையில் திரையுலகினர்
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டார். வேறு சில திரையுலகினரும் அரசியல் வேட்டி கட்ட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில்தான் விஜய் அனைவரின் போகஸிலும் விழ ஆரம்பித்தார். அவர் நேரடியாக இதுவரை அரசியலுக்கு வரவில்லை. ஆனால் மக்களை தன் பக்கம் வசீகரிக்க ஆரம்பித்து வெகு நாட்களாகிறது.
பெரும் வளர்ச்சியில் விஜய்
ஒரு சில படங்கள் தொடர்ந்து அவருக்குத் தோல்வியைத் தழுவியபோது பலரும் விஜய் இனி அவ்வளவுதான் என்று (அவசரப்பட்டு) முடிவு கட்டினர். ஆனால் அப்படியே ஒரு யூடர்ன் போட்டு விஸ்வரூபம் எடுத்தார் விஜய். அன்று தொடங்கிய அவரது வேகம்.. இன்று படு வேகமாகி, தமிழ் சினிமாவின் மிக முக்கிய வசூல் ராஜாவாக மாறி நிற்கிறார். சமீபத்தில் வெளியான அவரது படங்கள் பிற முக்கிய ஸ்டார்களின் படங்களை விட நன்றாக ஓடியுள்ளன, வசூலையும் கொடுத்துள்ளன என்கிறார்கள் திரையுலகினர்.
லேட்டஸ்ட் வசூல் ராஜா
உச்ச நடிகரை விஜய் முந்தி விட்டார் என்று சமீபத்தில் கூட தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியிருந்தார். முக்கிய நடிகர்களின் வரிசையில் தற்போது கிட்டத்தட்ட முதல் இடத்திற்கு வந்து விட்டார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான படங்களில் விஜய்யின் படமே லாபம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் இந்த வளர்ச்சி இப்போது எதிர்த் தரப்பின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது.
எதிர்த் தரப்பின் டென்ஷன்
இவர்களின் டென்ஷனுக்கு என்ன காரணம் என்றால் இவர் என்றாவது ஒரு நாள் அரசியலுக்கு வருவார். அப்படி வந்தால் அது நமக்கு சிக்கல் தரும் என்பதே இவர்களின் பயமாக உள்ளதாம். இதனால்தான் விஜய்க்கு ஸ்பீட் பிரேக்கர் போடும் முயற்சிகள் முடுக்கி விட்டுள்ளதாக சொல்கிறார்கள். விஜய்யின் சம்பளம் உள்ளிட்டவற்றில் எந்தக் குறையும் காண முடியாது என்கிறார்கள். காரணம், அத்தனைக்கும் அவர் பக்காவாக ரெக்கார்ட் வைத்திருப்பாராம்.
ஏதாவது சிக்காதா
அதேசமயம், அவரது சொத்துக்களை வைத்து குடைச்சல் கொடுக்கும் முயற்சிகள்தான் அவ்வப்போது முடுக்கி விடப்படுகிறது. ஆனால் அதிலும் கூட விஜய் தரப்பு தெளிவாக இருப்பதால் இதுவரை அவர் சிக்காமல் இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் நேரடியாக அரசியலுக்கு வரும் எண்ணத்தை இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும் கூட சட்டசபைத் தேர்தல் நேரத்தில் ஏதாவது செய்து விட்டால், அரசியலுக்கு வரப் போவதாக கூறப்படும் ஒரு முக்கியப் பிரபலத்தின் வரவுக்கு மிகப் பெரிய சிக்கலாகி விடும் என்ற அச்சமும் எதிர்த் தரப்பில் உள்ளதாம்.
பதைபதைப்பு
அவருக்கு விஜய்யால் சிக்கல் வந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பும் கூட விஜய்க்கு தொடர்ந்து சிக்கல் வரக் காரணம் என்று சொல்கிறார்கள். விஜய்யை டென்ஷனாக்கி ஆளை விடுங்கடா சாமி என்று அவரே பின்வாங்கி ஓட வேண்டும் என்ற நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதை அவரது சமீபத்திய படங்கள் மூலம் எதிர்த் தரப்பு புரிந்து கொண்டு இப்போது மேலும் டென்ஷனாகியுள்ளது.
பயப்படலையே
மெர்சல் படத்தில் விஜய் வைத்த வசனங்கள் எதிர்த் தரப்பை வெகுவாகவே கடுப்பேற்றி விட்டது. அதன் ரியாக்ஷனையும் வெளிப்படவே எல்லோரும் பார்த்தனர். ஆனாலும் விஜய் அசரவில்லை. சர்க்காரில் நேரடியாகவே பதிலடி கொடுத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் இப்போது மிகப் பிரபலமாக இருப்பது விஜய்தான். அதிலும் பிகில் படம் வந்து விஜய்யை பெண்கள் மத்தியில் வேறு லெவலுக்குக் கொண்டு போய் விட்டது. இது அப்படியே நாளை வாக்கு வங்கியாக மாறி விட்டால் என்னாகும் என்றஅச்சம் எதிர்த் தரப்பை தூங்க விடாமல் செய்கிறதாம்.
ஸ்பீட் பிரேக்கர்
எனவே விஜய்யின் வளர்ச்சிக்கு பிரேக் போட தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் இதுவரை தனக்கு எதிராக விரிக்கப்பட்ட வலைகளில் சிக்காமல் தப்பி விட்ட விஜய் இப்போதைய சிக்கலிலிருந்தும் ஈஸியாக தப்புவார் என்று சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.