விஜயகாந்தின் மகன் என்ற ஒரே அடையாளத்துடன் வளைய வரும் விஜய பிரபாகரன்.. பெரியவர்களை இப்படி பேசலாமா?
Recommended Video
சென்னை: விஜயகாந்த்தின் மகன் என்ற ஒரே அடையாளத்தை வைத்துக் கொண்டு தனது தந்தையை பார்க்க வருபவர்களை பன்றிகள் கூட்டம் என விமர்சிப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாகாவராயினும் நாகாக்க... என்ற குறளுக்கு ஏற்ப எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் வார்த்தையை அளந்து பேச வேண்டும். பொருளை கொட்டினால் அள்ளிவிடலாம். சொல்லை கொட்டினால் அள்ள முடியாது.
அரசியலில் ஒருவருக்கொருவர் என்னதான் விமர்சனங்களை அள்ளி வைத்தாலும் அதிலும் ஒரு வித நாகரிகத்தை கடைபிடிக்கத்தான் செய்கின்றனர். அதுதான் நியதி. ஆனால் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனோ அதை மறந்து வயதில் பெரியோர்களை சற்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
கவனிப்பு
திமுகவை குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என கடுமையாக விஜயகாந்தும், பிரேமலதாவும் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மகன் விஜய பிரபாகரன் கட்சியை கவனித்துக் கொள்கிறார்.
விஜயகாந்த் சிங்கம்
அத்தகைய விஜய பிரபாகரன் கும்பகோணத்தில் தேமுதிகவின் கொடி நாள் விழாவில் இன்று கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் பன்றிகள்தான் கூட்டமாக வரும். கூண்டில் இருந்தாலும் விஜயகாந்த் சிங்கம்.
சினிமா பாணி
என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லும் நீங்கள் ஏன்டா என் வீட்டு வாசலில் வந்து காத்துக் கிடக்கிறீர்கள் என்று விஜயகாந்த் திரைப்பட பாணியில் சர்ச்சைக்குரிய வகையில் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
உடல்நலம்
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய விஜயகாந்த்தை பியூஷ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், முரளிதர ராவ், திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என தலைவர்கள் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அரசியல்
அதை அவர்களே பேட்டியிலும் கூறிவிட்டனர். இந்த நிலையில் வீடு தேடி வரும் அவர்களை இது போல் பன்றிகள்தான் கூட்டமாக வரும், ஏன் என் வீட்டுக்கு வறீங்க போன்ற பேச்சுகளை இவர் பேசுவது சரியா. பெரியவர்கள் என்ற மரியாதை கூட இல்லாமல் இப்படி பேசுவதால் இவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடாதா.
தொண்டர்கள்
முதலில் எந்த அடையாளமும் இல்லாமல், கட்சி பொறுப்பிலும் இல்லாமல், கட்சிக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதையும் செய்யாமல் இது போல் பேசுவது எந்த விதத்தில் நியாயம். என்னதான் கூட்டணி பேசுபவர்களை மட்டுமே விஜய பிரபாகரன் விமர்சித்திருந்தாலும் இது போல் 4 தொண்டர்கள் கை தட்ட வேண்டும் என்பதற்காக பேசலாமா.
மரியாதை
இதை விஜயகாந்தும் பிரேமலதாவும் எப்படி அனுமதித்தனர். இவர் பேசுவதிலிருந்து இவர் அரசியல் முதிர்ச்சியின்மை நன்றாக தெரிகிறது. ஒரு பொதுக் கூட்டத்தில் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு, ஆஹா கேப்டன் மகன் சூப்பரா பேசினாரு என்ற ஒற்றை பாராட்டு இவருக்கு தேவையா. வீடு தேடி வருவோருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா
மோசம்
யாரை பார்த்தாலும் எப்படி இருக்கீங்க என கேட்பதுதான் தமிழர் பண்பாடு. ஆனால் அதை வீடு தேடி கேட்ட பெரியோர்களை தரம்தாழ்த்தி விமர்சிப்பது எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணிக்காக வீடு தேடி வருபவர்களை இவ்வாறு பேசும் விஜய பிரபாகரன், கடந்த கால வரலாறுகளை நினைத்து பார்க்க வேண்டும். விஜயகாந்த் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார்.
சுயபரிசோதனை
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அதன் பின்னர் 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார். எனவே வரலாறு முக்கியம் விஜய பிரபாகரன். ஒருவரை விமர்சனம் செய்யும் முன் மற்றவர்களை விமர்சனம் செய்ய நமக்கு தகுதி உண்டா என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
சுதீஷ்
அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அது மோசமாக இருக்கக் கூடாது. இதை விஜய பிரபாகரன் உணர வேண்டும். சாதித்தால் தட்டிக் கொடுப்பதும் இது போல் பேசினால் தட்டி வைப்பதும் தாய்மாமனின் கடமை என்பதை சுதீஷாவது புரிந்து கொள்ள வேண்டும்.