தேமுதிகவுக்குள் விஜயகாந்த் மகன் வந்தது.. சுதீஷுக்குப் பிடிக்கலையா.. விஜய பிரபாகரனே விளக்குகிறார்!
சென்னை: தேமுதிகவுக்குள் நான் வந்ததால் எந்த குழப்பமும் இல்லை. என்னை கட்சிக்குள் வருமாறு அழைத்ததே என் மாமா சுதீஷ்தான் என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
எல்லா கட்சிகளிலும் உள்ள தலைவர்கள் தங்கள் வாரிசுகளை எப்படியாவது உள் நுழைத்து விடுகின்றனர். அது போல் திமுகவை வாரிசு கட்சி என விமர்சனம் செய்த தேமுதிகவிலும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இணைந்துள்ளார்.
இத்தனை நாட்கள் படிப்பு, வேலை என இருந்த இவர் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதிலிருந்து தனது கட்சிப் பணிகளை தொடங்கினார். இவரது வரவு விஜயகாந்த்தின் மைத்துநர் சுதீஷுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.
விஜய பிரபாகரன்
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நலிந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் அளித்து வருவார். ஆனால் இந்த ஆண்டு அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இதையடுத்து தண்டையார்பேட்டையில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் நலத்திட்டங்களை வழங்கினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
அப்பகுதி மக்களுக்கு பிரியாணி மற்றும் கேக் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தலைமை முடிவு செய்யும்
அவர் கூறுகையில் தேமுதிகவுக்குள் நான் வந்ததால் எந்த குழப்பமும் இல்லை. இது போல் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்
தகவல்கள்
எதற்கும் 'நோ' சொல்லாமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு எதிர்கொள்ளும் குணம் கொண்டவன் நான். தேர்தலில் போட்டியிட தலைமை உத்தரவிட்டால் ஏற்பேன். மாமா சுதீஷ் எனது அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
மாமா என் நலம் விரும்பி
அது தவறு. சிறிய வயதில் அவர் தான் என்னை பள்ளியில் சேர்த்தார், என்னை கல்லூரியில் சேர்த்தவரும் அவரே. அவர்தான் தற்போது என்னை அரசியலுக்கும் வர சொன்னார். எனவே மாமா சுதீஷ் என்றுமே என் நலம் விரும்பி தான் என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.