தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வினீத் கோத்தாரி நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி கே தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமாணி கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்த தஹில் ரமாணி, மகாராஷ்டிர மாநில அரசு வழக்கறிஞராக இருந்தார்.
பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2017-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
''தினகரனை தலைவராக ஏற்க முடியலை.. வெளியேறிட்டேன்''- மகிளா காங். அப்சரா ரெட்டி பேட்டி
ராஜினாமா கடிதம்
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமாணி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு கடந்த 6-ஆம் தேதி அனுப்பியிருந்தார்.
வழக்குகள்
இவரது ராஜினாமாவை ஏற்கக் கூடாது எனக் கோரியும் இவரை மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது எனக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஹில் ராஜினாமா கடிதம் கொடுத்ததை அடுத்து அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை.
அரசு பங்களா
கொலிஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசு தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதிலிருந்து தஹில் விலகியிருந்தார். இதனிடையே அரசு பங்களாவில் இருந்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்
இந்த நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.