நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து சேவை செய்யுங்கள் - விஜயகாந்திற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து
இன்றைக்கு 68வது பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளனர், வாழ்த்திய இருவருக்கும் நன்றி கூறியுள்ளார் விஜய
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளனர்.
விஜயகாந்த் பிறந்தநாளில் பிரியாணி விருந்துகள் களைகட்டும். அன்னதானம் ஸ்பெஷலாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கொண்டாட்டங்கள் தடைபட்டுள்ளன.
இந்தநிலையில் நேரில் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்திக்க முடியாவிட்டாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சந்தித்து வருகிறார் விஜயகாந்த். தனது பிறந்தநாளில் மகன் சண்முக பாண்டியன் செல்பி எடுக்க குழந்தைதனமான சிரிப்போடு மனைவி மகன்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயகாந்த் செல்பி வித் பேமிலி என்று பதிவிட்டுள்ளார்.
கேப்டனாக மாறிய புரட்சி கலைஞர்
1952, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி.
எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நடிக்க வந்து புரட்சிக்கலைஞராகவும் கேப்டனாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜயகாந்த் தனது அனைத்து கடமைகளையும் முடித்த பின்னர் 1990ல் பிரேமலதாவைக் கைப் பிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
வெற்றிக்கொடி ஏற்றிய விஜயகாந்த்
சினிமாவில் வெற்றிகள் குறைந்தாலும், தேமுதிக என்ற கட்சியை துணிந்து ஆரம்பித்து, எதிர்நீச்சல் போட்ட அவருக்கு அரசியலில் ஏறுமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். 2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே ஜெயித்து சட்டமன்றம் போனார். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி போட்டு, 29 எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து என உயர்ந்தார்.
மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளர்
அரசியலில் நுழைந்து 10 ஆண்டுகளில் 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தப்பட்டார் விஜயகாந்த். ஆனால் பலமில்லாத கூட்டணி அமைத்ததால் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
விஜயகாந்த் மீண்டு வர வேண்டும்
உடல்நலக்குறைவும் அவரை செயல்பட விடாமல் செய்து விட்டது. 2021 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் களமிறங்கி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்களும், அவரது கட்சி ரசிகர்களும் விரும்புகின்றனர். விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
விஜயகாந்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார். திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வாழ்த்துக்கு விஜயகாந்த் நன்றி என்று பதிவிட்டுள்ளார்
ஆரோக்கியமான வாழ்த்து
நாளை பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். வாழ்த்திய துணை முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார் விஜயகாந்த்.