28 ஆண்டுகள் போராட்டம்.. மயிலாடுதுறையை தனிமாவட்டமாக பிரிக்க வேண்டும்.. விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: 28 ஆண்டுகளாக மக்கள் போராடி வருவதால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. கடைசியில் அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தமிழகத்தை பொருத்தவரையில் மாவட்டங்களில் அதிக ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது விழுப்புரம் மாவட்டம் ஆகும்.
விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அண்மையில் பிரிக்கப்பட்டது. இதனால் மொத்தம் மாவட்டங்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.
பயப்படாதீங்க.. மறுபடியும் சேர்ந்தே போறோம்.. அமித் ஷாவின் அதிரடி முடிவு.. யோசனையில் அதிமுக!
இந்த நிலையில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்க விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மயிலாடுதுறை பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளையும், குறைகளையும் எடுத்துரைப்பதற்கு யூனியன் பிரதேசமான காரைக்காலை கடந்து பல கிலோமீட்டர் சென்று நாகை மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
மயிலாடுதுறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளும், கோவில்களும் இருப்பதாலும் 28 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வேளை மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துவிடும்.