மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்.. தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி
சென்னை: உடல்நிலை சரியானதால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாத இறுதியில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாம். அப்போது, அதனுடன் கூடவே கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
லேசான கொரோனா பாதிப்பு விஜயகாந்த்துக்கு இருந்தது. இந்த நிலையில், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவரும் சில நாட்கள் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!
இதையடுத்து சில நாட்களில் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இரு நாட்களில் மறுபடியும், விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மீண்டும் அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 6ம் தேதி இரவு முதல், இன்று வரை சுமார் 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, இன்று விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.