தேமுதிக கொடி நாள்.. 3 வண்ணம் கொண்டு உருவானது ஏன்.. விஜயகாந்த் விளக்கம்
தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் கொடி நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: "ஏதோ 3 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும்" என்று தேமுதிக விஜயகாந்த் தமது தொண்டர்களுக்கு கொடிநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிகவினர் பயன்படுத்தும் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, 19 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த், கொடி அறிமுக நாள் விழாவை சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் நடத்துவார்.
பிறகு வீட்டிற்கு வெளியே இருந்த கம்பத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்து, கூடியிருக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குவார். அப்போது தொண்டர்களுடன் விஜயகாந்த் செல்பி எடுத்து கொள்வார்.
3 வர்ணங்கள்
ஆனால் இப்போது அவர் சிகிச்சையில் உள்ளதால் கொடிநாளை முன்னிட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேமுதிகவில் உள்ள 3 வர்ணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கொடியின் வர்ணங்கள் பற்றி உள்ள சாராம்சம் இதுதான்:
கொடிநாள்
"2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14 ஆம் தேதி உதயமானபோது, நமது நற்பணி மன்ற கொடி கழக கொடியாக மாற்றப்பட்டது. எதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும்.
ஒரே ரத்தம்
சிகப்பு நிறம்-:
இந்த வர்ணம் எதை குறிக்கிறது என்றால் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒன்றே குலம், ஒரே இனம் என்பதை வலியுறுத்தும் நிறம் ஆகும்.
வளர்ச்சி பாதை
மஞ்சள் நிறம்-:
வளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.
விவசாயம்
கருமை நிறம்-:
வறுமை, இலஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும் நிறமே கருப்பு ஆகும்.
புரட்சிதீபம்-:
மூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிப்பதாகும்.
|
வாழ்த்துக்கள்
எனவே தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, இலட்சியத்தோடு உருவாக்கப்பட்டது நமது கழக கொடி. இந்த இனிய கொடி நாளில் கழக தொண்டர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.