கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா
சென்னை:விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கட்சி தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சைக்கு பின்... விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தார்.
அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பிறகே விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். பேட்டரி காரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். விஜய காந்தை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த தேமுதிக தொண்டர்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பிரேமலதா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கேப்டன் நலமாக உள்ளார். 25 மணி நேரம் பயணம் செய்து வந்ததால் களைப்பின் காரணமாக அவர் ஓய்வு எடுத்தார்.
அவருக்கு மேல்சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்றது. தற்போது அவர் பூரண நலமுடன் உள்ளார். தமிழகத்தில் முக்கிய கட்சிகள் அனைத்துமே தேமுதிகவோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறினார்.