விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா அறிகுறியுடன் நேற்று இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.