வருகிறார் விஜயகாந்த்.. தேர்தலில் போட்டியிட முடிவு.. எந்த தொகுதியில் தெரியுமா? செம குஷியில் தேமுதிக
சென்னை: சென்னை விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக-தேமுதிக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக 12 தொகுதிகளைத்தான் ஒதுக்க ரெடியாக உள்ளது.
தேமுதிக 20 தொகுதிகளுக்கு மேலே வேண்டும் என்று கேட்டு வருகிறது.
விஜயகாந்த் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்
விஜயகாந்த் உடல்நிலை
அதிமுக இந்த கோரிக்கையை மறுக்க முக்கிய காரணம், விஜயகாந்த் உடல்நலக்குறைவுதான். ஏனெனில், அவரால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையிலும், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலும், மக்கள் எப்படி அந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதுதான், அதிமுக கேள்வி.
தேமுதிக தகவல்கள்
இந்த நிலையில்தான், விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட உள்ளார் என தேமுதிக தரப்பில் தகவல்கள் கசிகின்றன. இது உண்மையான தகவலா, அல்லது இப்படி கிளப்பி விட்டு, அதிமுகவிடமிருந்து அதிக தொகுதிகளை பெறுவதற்காக, இவ்வாறு தேமுதிக தரப்பில் செய்தி கசியவிடப்பட்டதா என்பது தெரியவில்லை.
பேசிய விஜயகாந்த்
ஆனால் சமீபத்தில் திறந்தவெளி வேனில், விஜயகாந்த்திடம் மைக் கொடுத்து பேச வைத்தார் பிரேமலதா. அவர் கஷ்டப்பட்டு பேசினார். அதேபோல விஜயகாந்த்தை விருகம்பாக்கத்தில் களமிறக்க பிரேமலதா விரும்புவதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் வருகை
விஜயகாந்த் களத்திற்கு வந்தால் அது தொண்டர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். இது அதிமுக கூட்டணிக்கும் பலன் தரக்கூடியது. எனவே தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை அதிமுக தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் தேமுதிக கேட்டுள்ளது. இதற்காக விஜயகாந்த் களத்திற்கு வருவார் என்றே அடித்துக் கூறப்படுகிறது.