கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன்.. உதவ முன்வந்த விஜயகாந்த்
சென்னை: கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூரில் ஏற்கெனவே ஆந்திர மாநில மருத்துவர் பலியான போது அவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடல்
இது போல் தமிழகத்தில் கொரோனாவால் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை புதைக்க தான் இடம் தருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.
நிச்சயம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள்.
கால்நடைகள்
இப்படி இருக்கும் போது மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மகனிதரின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும். கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள் தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
மனிதாபிமானம்
உடலை அடக்கம் செய்வதால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசும் தெரிவித்துள்ளது. ஆனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும், ஓட்டுநர் உள்பட மற்றவர்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து, இது போன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பொறியியல் கல்லூரி
மேலும் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.