நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு முழு ஆதரவு.. விஜயகாந்த் அறிவிப்பு! தொண்டர்களுக்கு அழைப்பு
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தல்களில், அதிமுகவுக்கு, தேமுதிக கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த இரு பகுதிகளுக்கும், வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தளவில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் களமிறங்குகின்றனர்.
விக்ரவாண்டி தொகுதிகள் முத்தமிழ்ச் செல்வன், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக சார்பில் களம் இறங்குகிறார்கள்.
இந்த இடைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை சமீபத்தில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக அமைச்சர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள், மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினர். (2-2) pic.twitter.com/V8S6sjB1c2
— Vijayakant (@iVijayakant) September 25, 2019
இந்த நிலையில், விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக, முழு ஆதரவு அளிக்கும். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், தேமுதிக தொண்டர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் அளித்து அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.