மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்... தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி..!
சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை வீடு திரும்பினார்.
இதனால் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கொரோனாவுக்கான சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து தேமுதிக வட்டாரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, விஜயகாந்த் 100% நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். அவ்வாறு அவர் தெரிவித்த அடுத்த இரண்டு நாட்களில் பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்கள் இருவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், விஜயகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாலை 7 மணியளவில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
விஜயகாந்த் பூரண நலம்.. காலையிலேயே மருத்துவமனையில் வந்த நல்ல செய்தி.. தொண்டர்கள் உற்சாகம்
இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அவர்கள் இருவரும் யாரையும் சந்திக்காமல் ஓய்வில் இருப்பார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே வீடு திரும்பிய விஜயகாந்த் காரை விட்டு இறங்கியதும் அவருக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டிக்கழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.