அதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்!
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ளது. இந்த இரு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தருவதால் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறார்.
விஜயகாந்த் பிரச்சாரம்
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துச்செல்வனை ஆதரித்து வரும் 19ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேசப்போகும் விஜயகாந்த்
இதனால் விஜயகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு மக்களை தேர்தலில் சந்திக்கப்போகிறார். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிமுகவினரும் விஜயகாந்தின் வருகையை மகிழ்ச்சியோடு எதிர்நோக்கி உள்ளனர்.
பாமகவும் களம்
இதனிடையே விக்கிரவாண்டிக்கு விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவது அதிமுகவுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பாமக எப்படி எடுத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை என்கிறார்கள். ஏனெனில் இரு கட்சிகளுக்கு இடையே ஆரம்பம் முதலே மோதல் மனவருத்தம் இருப்பதால் இப்படி சொல்கிறார்கள். எனினும் பகையை மறந்து பாமகவும் அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.
அதிமுக நம்பிக்கை
இது ஒருபுறம் எனில் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வனை வெற்றி பெற வைக்க வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாமகவுக்குமே கொஞ்சம் மனவருத்தம் நீண்ட காலமாகவே இருந்தது. இருப்பினும் பழைய கசப்புகளை மறந்து சிவி சண்முகம், ராமதாஸ், விஜயகாந்த் என அனைவரும் இணைந்து பணியாற்றி வருவதை அதிமுகவினர் பாராட்டுகிறார்கள். இதன் மூலம் திமுகவின் தொகுதியான விக்கிரவாண்டியை கைப்பற்ற முடியும் என்று அதிமுகவினர் நம்புகிறார்கள்.