இங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்!
வேளாண் மசோதா குறித்து தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து, அவைகளில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்... எது உண்மை? எது பொய்? என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசின் கடமை" என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபையிலும், தமிழகத்திலும் கொந்தளித்து வருகின்றனர்.
ஆனால், இந்த மசோதாவினால் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் எடப்பாடியார் வரை நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதாக்கள் சம்பந்தமாக விவாதங்களும் சோஷியல் மீடியாவிலும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்தால் ஏற்படும் சாதக பாதகங்களை தெளிவாக ஆராய மத்திய மாநில அரசுகள் குழு அமைத்து, அந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பலன் ,என்ன நன்மை, என்ன தீமை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், விவசாய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் பயனளிக்கும் வகையில் அமைந்தால் வேளாண் சட்ட வரவேற்கும் என்றும் எந்த விதத்திலாவது மசோதாவை தேமுதிக ஒரு சிறிய பாதிப்பு இருக்குமேயாலும் கூட அதனை தேமுதிக வரவேற்காது.
மேலும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு என அனைத்திற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இல்லையென்றால் எது உண்மை எது பொய் என்பது மக்களுக்கு புரியாமலேயே போய்விடும்.
எனவே தமிழக அரசு இதில் உடல் யாக கவனம் செலுத்தி, புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து, இதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.