என்றும் இல்லாத திடீர் கெத்து.. தேமுதிக பலம் காட்டியதில் ஒளிஞ்சிருக்கும் தேர்தல் கணக்கு
Recommended Video
சென்னை: இதுவரைக்கும் எத்தனையோ முறை சிகிச்சைக்காக போய் வந்திருக்கிறார், ஆனால் இந்த முறை மட்டும் விஜயகாந்துக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில வருஷங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதனால் அவரால் அரசியலில் ஆர்வம் காட்ட முடியவில்லை. முக்கிய நிர்வாகிகள், செயலாளர்கள் கட்சி தாவலில் ஈடுபட, கட்சியோ சரிவை நோக்கி சென்றது. அதனால் பிரேமலதாவை பொருளாளராக உயர்த்தி, மூத்த மகன் விஜயபிரபாகரனையும் கட்சி பொறுப்பை கவனிக்கும்படி விஜயகாந்த் சொன்னார்.
தன் வயதுக்கு ஏற்றவரை, விஜயபிரபாகரன் இளைஞர்களை கவர்ந்து வருகிறார். ஆனால் வீழ்ந்து கிடந்த கட்சியை செங்குத்தாக தூக்கி நிறுத்த விஜயகாந்த்தை தவிர வேறு யாராலும் முடியாது என்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளதே நிதர்சனம். அதனால்தான் கூட்டணி சம்பந்தமான எந்த பேச்சுவார்த்தையையும் தேமுதிக தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
தாறுமாறு செய்திகள்
பிரேமலதா பாஜக தரப்புக்கு டிமாண்ட் வைக்கிறார், பாஜகவுடன் லடாய், டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தை, போதுமான சீட் கிடைக்காவிட்டால் 3-வது அணியில் கை கோர்ப்பது, இப்படியெல்லாம் தாறுமாறான செய்திகள் கடந்த 2 மாதங்களாக மீடியாவை ஆக்கிரமித்தன. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை, பொய் என்றெல்லாம் தெரியாவிட்டாலும், விஜயகாந்த் இல்லாவிட்டால் தேமுதிகவே கிடையாது என்பது மட்டும் உண்மையாகி உள்ளது.
விஜயகாந்த் வரட்டும்
பலமிழந்த கட்சியாக தேமுதிக உள்ளதால்தானோ என்னவோ, பாஜக, அதிமுக, அமமுக, உள்ளிட்ட எந்த கட்சியானாலும் இதுவரை இவர்கள் சொல்லி வந்த ஒற்ற வார்த்தை "விஜயகாந்த் வரட்டும்.. பேசிக்கலாம்" என்பதுதான். இன்று விஜயகாந்த் ஊர் திரும்பி உள்ளார். அவரை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிவது என்பது வழக்கமான ஒன்றுதான்.
அரசியல் தலைவர்
ஆனால், பிரதான சாலைகளில் விஜயகாந்துக்கு ஏகப்பட்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் மேலாக, சாலையோரங்களில் தாரை, தப்பட்டைகள் முழக்கமிட்டன... கலர் கலர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆள் பிடித்து வரப்பட்டது என்ற தகவலும் கிடைத்தது. விஜயகாந்த் குணமாகி வரவேண்டும் என்பது கட்சி, அரசியலையும் தாண்டி எல்லோருக்குமே உள்ள எண்ணம்தான். இந்த எண்ணம் விஜயகாந்த் தவிர வேறு எந்த அரசியல் கட்சி தலைவர் மீதும் இப்படி நம் மக்களுக்கு ஏற்பட்டதில்லை.
பலமான கட்சி
இருந்தாலும், வியக்க வைக்கும் இந்த ஏற்பாடுகள் எதற்காக ? யார் செய்த ஏற்பாடுகள்? இதற்கு முன்பு கூட விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர், அமெரிக்கா சென்று நல்லபடியாக திரும்பி வந்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் இந்த வரவேற்பு இல்லையே ஏன்? கட்சியின் பலத்தை நிரூபிக்க தேமுதிக தரப்பிலேயே செய்யப்பட்ட ஏற்பாடா இவை எல்லாம்? நாங்கள் இன்னும் தொண்டர்கள் பலத்துடன், மக்கள் ஆதரவுடன் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளங்களா இவை? என்றெல்லாம் தெரியவில்லை.
விஜயகாந்த்துக்கு தெரியுமா?
தொண்டர்கள் திரண்டு வந்தார்களோ அல்லது கூட்டி வரப்பட்டார்களோ அது வேறு விஷயம்.. ஆனால் அவர் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கியிருந்ததும், வரவேற்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்ததும்... வரவேற்க விடிய விடிய எதிர்பார்த்து காத்திருந்ததும், விஜயகாந்த்துக்கு தெரியுமா அல்லது தெரியப்படுத்தினார்களா என்பது கேள்வியே!
இதுவே போதும்
ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் கட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தொண்டர்கள் எதிர் பார்க்கிறார்கள். உடல் குணமாகி வந்துவிட்டாரே, இதுவே போதும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். அவ்வளவுதான்!