தமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகள்.. ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்
சென்னை: தங்களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.
தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சருக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கெ எதிராகவும் அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் சார்பிலும் அமைச்சர்கள் சார்பிலும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.
அந்த வழக்குகள் , சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தொடர்ந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு,மற்றும் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் மொத்தம் 29 வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தாங்கள் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று கொள்வதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் வாபஸ் பெற்றுக்கொண்டதையடித்து அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர்.