மு.க.ஸ்டாலின் கோபப்படலாம்.. ஆனால் என் அப்பா கோபப்படக்கூடாதா.. விஜயபிரபாகரன்
விஜயகாந்த் விரைவில் பிரச்சாரம் செய்வார் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கோபப்பட்டால் அதை யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால் என் அப்பா கட்சி தொண்டர்களை அடித்தால் மட்டும் அது பெரிதுபடுத்தப்படுகிறது என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். இதனால் அவரது மூத்தமகன் விஜயபிரபாகரன் இங்கிருந்து கட்சியின் முக்கிய நிகழ்வை கவனித்து வருகிறார். அவ்வப்போது செய்தியாளர்களிடம் பேசி பொதுமக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி வருகிறார்.
தேமுதிக சார்பில் கொடிநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜயபிரபாகரன் பேசியதாவது:
அம்மா, அப்பா
இங்கு கூடியுள்ள பெண்கள் மற்றும் ஆண்களை பார்க்கும்போது என் அப்பா, அம்மாவை பார்ப்பது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தேமுதிக கொடி பறக்கிறது. அதனால் வரும் எம்பி தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
காலில் விழுகிறார்கள்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 120 சீட்டுகள் இருந்தாலும் அதிமுக ஒரு கூஜாதான், 88 சீட்கள் இருக்கும் திமுகவும் ஒரு கூஜாதான். கூட்டணிக்காக மறைமுகமாகக் காலில் விழுந்து வருகிறார்கள்
கண்டுகொள்வதில்லை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கோபப்படுகிறார். ஆனால் அதை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் என் அப்பா கட்சித் தொண்டர்களை அடித்தால் மட்டும் அது பெரிதுபடுத்தப்பத்தப்படுகிறது.
பிரச்சாரம்
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் தேமுதிக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும். தேர்தல் பிரச்சாரத்திலும் கண்டிப்பாக ஈடுபடுவார்" என்றார்.