எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா.. வேற யாருமல்ல.. விஜயகாந்த் மகன் வாய்தான்!
விஜயபிரபாகரனின் பேச்சால் இன்று கட்சியே வறுபட்டு இருக்கிறது
Recommended Video
சென்னை: இவ்வளவு அரசியல் கட்சிகளும் தேமுதிகவை ஏன் ஒதுக்குகிறார்கள் தெரியுமா? எதற்காக இப்படி அலையவிடுகிறார்கள் தெரியுமா? விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் அன்று பேசிய பேச்சுதான்!
சில தினங்களுக்கு முன்பு விஜயபிரபாகரன் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றவங்க எதுக்குடா எங்க வீட்டுவாசலில் வந்து கூட்டணிக்காக நின்னீங்க? விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால், பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் இருக்காங்க" என்றார்.
விஜயகாந்த் வீட்டுக்கு அந்த சமயத்தில் சென்றவர்கள் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள். ஓபிஎஸ்ஸும் போனார். அத்தனை பேருமே விஜயகாந்த் உடல் நலன் விசாரிக்கத்தான் வந்தோம் என்றார்கள், திருநாவுக்கரசைத் தவிர.
கூட்டணிக்கு வந்தால் பாருங்க.. இல்லைனா விட்டுடுங்க.. தேமுதிக மீது கடுப்பில் மோடி!
கைதட்டல் முக்கியமா?
இவர்களில் யாரை பன்றி என்று சொன்னார் விஜயபிரபாகரன்? அன்று அவர் பேசிய பேச்சுதான் இன்று வினையாக வந்து நிற்கிறது. வந்தவர்கள் எல்லாம் வயதிலும், அனுபவத்திலும் விஜயகாந்த்தைவிட மூத்தவர்களே. சுற்றி இருக்கும் 4 பேர் கை தட்ட வேண்டும் என்பதற்காக இப்படி உணர்ச்சிவசப்பட்டு விஜயபிரபாகரன் பேசிவிட்டார் என்றும் சொல்ல முடியாது.
சின்னபையன்
இது சம்பந்தமாக அப்போதே டிடிவி தினகரன் "இப்படி எல்லாம் பேசலாமா? அப்படி போய் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? எல்லா தலைவர்களும் என்று ஏன் சொல்றார்? அந்த பையன், சரி சின்னப்பையன் சொன்னா சொல்லிட்டு போறார்னு விட்டுட்டேன்" என்றார். இது தினகரனின் பக்குவம். இதில் கால்வாசி கூட விஜய பிரபாகரனுக்கு கிடையாது.
பெரிய அவமானம்
தினகரனை தவிர மற்றவர்கள் யாருமே கருத்து சொல்லவில்லை என்பதால் விஜயபிரபாகரன் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று அர்த்தம் கிடையாது. உள்ளுக்குள் உழன்ற கோபத்தை இப்போது தேமுதிக மீது வச்சு செய்கிறார்கள் அத்தனை பேரும். விஜயகாந்த் வீட்டுக்கு போகாத தினகரனுக்கே இப்படி என்றால் அதிமுக, திமுக தரப்பு சென்று வந்தவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் எல்லாம் இன்றைய அரசியலை வழிநடத்தி செல்பவர்கள் இல்லையா? எவ்வளவு பெரிய அவமானம் இது?
விஜயகாந்த்
இப்படி பேசியதற்காக பெற்ற பிள்ளையை கண்டித்தார்களா இல்லையா என்று கூட நமக்கு தெரியாது. ஆனால் அந்த பேச்சை தலைவர்கள் லேசில் மறக்க முடியாது. இதில் விசித்திரம் என்னவென்றால், தேமுதிகவில் யார் என்ன தப்பு செய்தாலும் விஜயகாந்த் தலைதான் உருளுகிறது. அதனால் "சின்ன பையனை பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார் விஜயகாந்த்" என்ற அவபெயரும் அவருக்கேதான் போய் சேர்ந்தது.
வரலாறு தெரியுமா?
இன்று திமுக, அதிமுக என மாறி மாறி தேடி வந்து தாய்மாமன் சுதீஷ் பேசிக் கொண்டிருக்கிறாரே... அனைவரிடமும் வறுபட்டு கொண்டிருக்கிறாரே... இதெற்கெல்லாம் அன்று கெத்துடன் பேசிய விஜயபிரபாகரன் என்ன பதில் சொல்ல போகிறார்? இப்போது யார் தேடி வந்து பேசுவது? அரசியலில் அரிச்சுவடி தெரியுமா விஜயபிரபாகரனுக்கு? தமிழக வரலாறு தெரியுமா? திராவிடர் பாரம்பரியம் தெரியுமா?
மறக்க முடியாது
அரசியலையும் தாண்டி எல்லா தலைவராலும் நேசிக்கப்படுபவர் விஜயகாந்த். அது கட்சி தலைவர் என்ற முறையில் இல்லை. விஜயபிரபாகரன் பிறப்பதற்கு முன்பே விஜயகாந்த்தை உயர்த்தி ஆளாக்கி பூரித்து பார்த்து மகிழ்ந்த தமிழகம் இது! ஆனால் இன்று அத்தனை அதிருப்திகளையும், அத்தனை இழுபறிகளையும், தேடி தந்துவிட்டது அன்று விஜயபிரபாகரன் பேச்சினால்தான்! இதை யாரும் வெளியில் பகிரங்கமாக சொல்ல மாட்டார்கள், சொல்லவும் முடியாது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக மறக்க மாட்டார்கள்!
இவர்கள்தான் காரணம்
நடந்து முடிந்த மற்றும் நடந்து வரும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது... விஜயகாந்த்துக்கு எதிரானவர்கள் கண்டிப்பாக வெளியில் இல்லை.. வீட்டிற்கு உள்ளேயேதான் இருக்கிறார்கள்!