என்னாச்சு.. அப்பாவுடன் மோதலா.. எஸ்ஏசி அறிவிப்பால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்கள் பெரும் குழப்பம்!
விஜய் அரசியல் கட்சி துவங்கினால் யாருக்கு லாபமாக இருக்கும்?
சென்னை: என் அப்பா ஆரம்பிக்க போகும் கட்சிக்கும், நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று விளக்கம் தந்துள்ளார் விஜய்.. ஆனால், நடிகர் விஜய் வேறு, அவரது அப்பா வேறு என்று ரசிகர்கள் என்றுமே பார்த்தது இல்லை.. அப்படியானால், அப்பா கட்சி ஆரம்பிக்க போவது எதற்காக? யாருக்காக? என்ற கேள்வி எழுகிறது.
விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையே அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக பிரச்சினை வெடித்துள்ளதாகவும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது.. திமுக, அதிமுக கூட்டணிகள் வழக்கம்போல சுறுசுறுப்பாகிவிட்டன... இதற்கு நடுவில் ரஜினி வருவாரா? வரமாட்டாரா? என்று இன்னமும் நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், சம்பந்தமே இல்லாமல் திடீரென விஜய்-யின் அரசியல் பேச்சு பரபரப்பாக கிளம்பி உள்ளது.
அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா விஜய்? உண்மை என்ன
பிறந்த நாள்
சில மாதங்களுக்கு முன்பு விஜய் பிறந்த நாளுக்கு போஸ்டர்களை ஒட்டியபோதும் இப்படித்தான் பேச்சு எழுந்தது.. ஆனால் வருஷா வருஷம் அப்படித்தான் ரசிகர்கள் வருங்கால முதல்வரே, தலைவரே, எங்கள் எம்ஜியாரே என்று புகழ்ந்து போஸ்டர் ஒட்டி வருவதால், இந்த முறையும் அப்படித்தான் கருதப்பட்டது.
விவகாரம்
ஆனால் 10 நாட்களுக்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகரன் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விஜய்யின் அரசியல் குறித்து பேசியதால், அதை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து விட முடியவில்லை.. "பாஜகவில் இணைய போகிறோம் என்ற தகவலில் உண்மை இல்லை.. மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார்.. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது, அரசியல் கட்சியாக மாறும்" என்றார்.
குழப்பம்
அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் எடுக்கும் முடிவுகளுக்கு காரணம், எஸ்ஏ சந்திரசேகரின் தூண்டுதலேகாரணம் என்ற விமர்சனங்கள் பல வருடங்களாகவே தமிழகத்தில் உண்டு.. மகனை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எஸ்ஏசியின் ஆசையையும் மக்கள் அறிந்த ஒன்றே. எதற்காக பாஜக என்று பேட்டியில் சொன்னார் என்பதுதான் குழப்பமானது.. ஒருவேளை விஜய் தரப்பே இதை செய்ததா என்றுகூட உறுதியாக தெரியாது..
பண்ணைவீடு
இதுபோன்ற சமயத்தில்தான் 2 விஷயங்கள் கசிந்தன.. ஒன்று, சென்னை ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில், தனது இயக்க மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.. அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளார்.. தேர்தல் நடக்க உள்ள சமயத்தில் விஜய் நிர்வாகிகளை சந்தித்ததுதான் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.
சட்டமன்ற தேர்தல்
எந்த முக்கிய முடிவையும் அப்போது எடுக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும், சட்டசமன்ற தேர்தலில், ரசிகர் மன்றம் கண்டிப்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத்தான் போகிறது என்று அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாம்.. அப்போதுதான், அதிமுக - திமுக கூட்டணிக்கு மாறாக உருவாகும் கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலை வரலாம் அல்லது அதிமுக - பாஜகவை சமாளிக்க திமுகவை விஜய் ஆதரிக்கவும் செய்யலாம் என்று அரசியல் நோக்கர்களும் கருத்துகூறினார்கள்.
வழக்கறிஞர்
இன்னொரு விஷயமும் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.. அரசியல் கட்சி துவங்க அவசர அவசரமாக தன்னுடைய அப்பா மூலம் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியானது.. டெல்லியை சேர்ந்த அந்த வழக்கறிஞர் யார் என்று தெரியவில்லை.. இப்படி 2 பெரும் விஷயங்கள் சமீப காலமாக அரசியல் களத்தை வலம் வந்த நிலையில்தான், , இன்று இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆளும் தரப்பு
இந்த அறிவிப்பு பலவித அனுமானங்களை எழுப்பி வருகிறது.. விஜய் கட்சி ஆரம்பித்தால், தனித்து களமிறங்குவாரா? அல்லது ஏற்கனவே சொன்னது போல திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா? என்ற சந்தேகம் எழுகிறது.. காரணம், ரெய்டு நடந்தது முதலே ஆளும்தரப்பு, மத்திய தரப்பு மீது விஜய்க்கு அதிருப்திகள் இருக்கவே செய்யும்.. ஆனால், அப்படி அதிருப்தி இருந்திருக்குமாயின், விஜய் சமீப காலமாகவே எந்த கட்சியையும் முக்கியமாக பாஜகவை விமர்சிக்கவே இல்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.
பிளஸ் பாயிண்ட்
மற்றொரு புறம் ரஜினி இந்த நேரத்தில் கட்சி துவங்காதது விஜய்க்கு பெருத்த பிளஸ் பாயிண்ட்டாகவும் அமைந்துவிட்டது.. ஏற்கனவே ரஜினிக்கு இணையாக விஜய்யை தூக்கி வைத்து பேசிவரும்போது, ரஜினி ரசிகர்களுக்கு இது நிச்சயம் சறுக்கலாகவே அமையும்.. ரஜினி செய்யாததை விஜய் செய்வாரா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிடும்.
நற்பணி மன்றம்
விஜய்யை பொறுத்தவரை, ரசிகர் மன்றம் மூலம் நிறைய செய்துள்ளார்.. நற்பணி மன்றம் மூலம் ஏராளமான உதவிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகின்றன.. அதேசமயம், ஒரு கட்சியை வழிநடத்தவும், தேர்தலில் போட்டியிடவும், இது ஒன்று மட்டுமே மூலதனமாக இருக்காது.. விஜய்க்கு வயசு குறைவுதான்.. செல்வாக்கும் அதிகம்தான்.. ஆனால், அரசியல் அனுபவம் என்பது சுத்தமாக இல்லை.
பரபரப்பு
தமிழகத்தில் தனக்கிருக்கும் புகழை மட்டுமே வைத்து கொண்டு களமிறங்குவது எந்த அளவுக்கு கை கொடுக்கும்? தமிழக மக்கள் இதை எப்படி வரவேற்பு தருவார்கள்? என்று குழப்பத்தில் இருந்த நிலையில்,தான் விஜய் அறிக்கை மூலம் அனைத்தையும் தெளிபுடுத்தி உள்ளார்.. "அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், என் தந்தை ஆரம்பித்துள்ளார் என்பதற்காக கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம், அக்கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" என்றும் விளக்கம் தந்துள்ளார்,
மகன்
விஜய் வேறு, விஜய் அப்பா வேறு என்று ரசிகர்கள் என்றுமே பார்த்தது இல்லை.. அப்படியானால், அப்பா கட்சி ஆரம்பிக்க போவது எதற்காக? யாருக்காக?என்ற கேள்வி எழுகிறது.. மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் எஸ்ஏசி இவ்வளவு நாள் பேசி வந்தார், மேடைகளிலும் சொன்னார், டிவி பேட்டிகளிலும் விஜய் அரசியல் குறித்து பேசினார்.. அப்படி இருக்கும்போது இப்போது விஜய் தரும் விளக்கத்தை முழுவதுமாக ஏற்க முடியவில்லை.
ரசிகர்கள் குழப்பம்
எஸ்ஏசி எந்த அரசியல் கட்சி ஆரம்பித்தாலும், அது விஜய்யின் பிம்பமாகத்தான பார்க்கப்படும்.. ஒருவேளை கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் வரும் ரிசல்ட்களை வைத்து காய்கள் இனி வரும் காலங்களில் நடத்தப்படுமா? அல்லது தேர்தல் நெருங்கும் சமயத்தில் விஜய் தன் அப்பாவில் கட்சியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம், இந்த விஷயத்தில் ரசிகர்கள் ரொம்பவே குழம்பி போய் உள்ளனர்.. மகன் இருக்கும்போது, அப்பா எதற்காக தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும்? அப்பாவுக்கும், மகனுக்கும் ஏதாவது சண்டையா, மனத்தாங்கலா என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்!