மீடியா வெளிச்சம் போதுமா? நேற்று வந்தவர்களுக்கு பதவியா? விஜய்யின் தவெகவில் அதிருப்தியில் நிர்வாகிகள்?
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டம் தொடங்கி ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமன பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கட்சியில் புதிதாக வந்தவர்கள் பலருக்கு பதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ரசிகர் மன்றத்தில் இருந்து பணியாற்றியவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. இதனால் பல நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்தவர் நடிகர் விஜய். தனது கடைசி படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநில மாநாட்டின் மூலம் அரசியலில் குதித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என கட்சியின் பெயரை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ட்விட்டர் மூலம் அரசியல் செய்து வருகிறார். ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதன்முறையாக மக்கள் பிரச்சனைக்காக நேரில் சென்று குரல் கொடுக்க இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம்:
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கட்சிக்குள் பல்வேறு சிக்கல்களை விஜய் எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கும் நிலையில் அவரை தவிர மாநில நிர்வாகிகள் யாரும் தெரிந்த முகமாக இல்லை.
நடிகர் விஜய்:
பொதுவாக ஒரு கட்சி ஆரம்பித்தால் ஏற்கனவே வேறு கட்சிகளில் இருப்பவர்கள் அங்கு செல்வது வழக்கம். ஆனால் விஜய் கட்சியை பொறுத்தவரை விஜய் புஸ்ஸி ஆனந்த் தவிர வேறு யாரும் இல்லை. ரசிகர்கள் பலம் மட்டுமே விஜய்க்கு இருக்கிறது. தேர்தல் வந்தால் தான் அவருக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கும் என்பது தெரியவரும். இது ஒரு புறம் இருக்க தற்போது இன்னும் ஒரு சில மாநில நிர்வாகிகள் தவிர கட்சியின் முழு நிர்வாகிகள் பட்டியல் வெளியாகவில்லை.
நிர்வாகிகள் பட்டியல்:
தற்போது மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும் என விஜய் தரப்பு கூறியிருந்தது. ஆனால் சில மாவட்டங்களில் புதிதாக வந்து மீடியா வெளிச்சம் பெற்ற பெண்கள் உட்பட சிலருக்கு மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. விஜயிடம் அதிக செல்வாக்கு பெற்ற மாநில நிர்வாகி ஒருவரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே அதிகளவில் பதவிகள் வாரி கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
கடும் அதிருப்தி:
இதன் காரணமாக ஏற்கனவே கட்சியில் ரசிகர் மன்றத்தில் இருந்து பயணிக்கும் ஒரு சில நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்டம், நகரம், மாநகரம், பேரூராட்சி, ஒன்றியம், கிளை, வார்டு என பல பதவிகள் மற்றும் மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞரணி, ஓட்டுனர் அணி, மீனவர் அணி என பல அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டும் என விஜய் நினைக்கிறார். ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சியில் புகைச்சல்:
மாவட்ட செயலாளர்கள் பெயரை ஒரு சில மாவட்டங்களில் மாணவர் அணியினர் பயன்படுத்துவதில்லை. வர்த்தக அணி என்ற பெயரில் தனி அணியை போல் சில மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நிர்வாகிகள் நியமனம் சிக்கல் மிகுந்ததாக இருக்கும் என்கின்றனர் நிர்வாகிகள். ஏற்கனவே சில மாவட்டங்களில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என பலர் விலகி வரும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகு கட்சியில் நிச்சயம் பூகம்பம் வெடிக்கும் என்கின்றனர் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications