கொரோனாவை காரணம் கூறி அதிகாரிகள் அத்துமீறினால்... தொடர் கடையடைப்பு... வணிகர் சங்கம் திட்டவட்டம்..!
சென்னை: கொரோனாவை காரணம் கூறி வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் அத்துமீறினால் தொடர் கடையடைப்பு நடத்த வேண்டியது வரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் கடைகள், ஹோட்டல்கள், உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு விதித்த கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராயும் வகையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.
இது ஒரு சில இடங்களில் அமைதியான முறையிலும், ஒரு சில இடங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்துக்கிறது. வியாபாரிகளிடம் காவல்துறையினரும், அதிகாரிகளும் கறார் காட்டுவது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு புகார்கள் குவிந்து வந்தன.
இந்நிலையில் அந்த பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் வியாபாரிகள் அளித்த புகார்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்... சமாதானம் செய்த மனைவி..!
கொரோனா ஆய்வு என்ற பெயரில் 10 முதல் 15 நபர்கள் வரை திடுதிப்பென வணிக நிறுவனங்களுக்குள் நுழைவதாகவும் மனம் போன போக்கில் வணிகர்களிடம் அபராதம் வசூல் செய்வதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஒரு சில அதிகாரிகள் சாவியை அடாவடியாக பிடுங்கிச் செல்லும் நிகழ்வுகளும் நடப்பதாக முறையிடப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், கொரோனாவை காரணம் கூறி வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் இனி அத்துமீறினால் தொடர் கடையடைப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது என்றும், சட்டத்திற்கு புறம்பான முறையில் கொரோனா ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் நடந்துகொண்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது.