விழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே 10ம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமி முன்பகை காரணமாக உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் கலிய பெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மரண வாக்கு மூலம் அளித்த போது, எப்படி தன்னை கவுன்சிலர் முருகனும் கலிய பெருமாளும் தீ வைத்து எரித்தார்கள் என்பது பற்றி கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி உள்ளது அதிமுக தலைமை.
"என் அப்பன் எங்கே".. வெந்து போன உடலுடன் கதறிய ஜெயஸ்ரீ.. மனதை உலுக்கும் விழுப்புரம் பயங்கரம்
Recommended Video
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட காரணத்தாலும், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (சிறுமதுரை புதுக்காலனி கழகச் செயலாளர்), முருகன் (சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.