இப்படி ஒரு குடும்பத்தை எங்காவது பார்த்திருக்கிறீங்களா?.. வைரலாகும் ஜெ. பேச்சு!
கருணாநிதி குடும்பத்தை விமர்சித்து ஜெயலலிதா பேசிய வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: "இப்படி ஒரு குடும்பத்தை உலகத்தின் எந்த மூலையிலாவது பார்த்திருக்கிறீங்களா?" என்று கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வகித்த பதவிகளை லிஸ்ட் போட்டு தாக்கிய மறைந்த ஜெயலலிதாவின் வீடியோவை அதிமுக வைரலாக்கி வருகிறது.
நேற்று உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய இளைஞர் அணி தலைமை பொறுப்பு தரப்பட்டதை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பில் இதற்கு கடுமையான கண்டனமும், விமர்சனமும் எழுந்து வருகிறது.
அரசியல் அனுபவமே இல்லாத உதயநிதிக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு எதற்கு என்றும், இவ்வளவு காலம் இவர் திமுகவில் என்ன செய்து சாதனை படைத்துவிட்டார் என்பதற்காக இந்த பொறுப்பு தரப்படுகிறது என்றும் தாறுமாறாக நெட்டிசன்கள் போட்டு கிழித்து வருகிறார்கள்.
ஜெயலலிதா
இந்த சந்தர்ப்பத்தை அதிமுக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது. தேடி கண்டுபிடித்து ஜெயலலிதா பேசும் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறது. பொதுவாக ஜெயலலிதா, யாரையுமே பெரிசாக எடுத்து கொண்டு பேசமாட்டார். திட்டுவதானால்கூட, விமர்சிப்பதானால்கூட அதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று பார்ப்பாரே தவிர, மற்ற கட்சியினரை கண்டுகொள்வதே கிடையாது.
வீடியோ
அப்படி ஜெயலலிதா கடைசியாக எதிர்த்து நின்று பேசியது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைதான். "திரு.கருணாநிதி" என்று பெயர் சொல்லி நிறைய முறை விமர்சித்தது எதிர்த்தது அநேகமாக ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும். அந்த மாதிரியான ஒரு வீடியோ பேச்சுதான் இது:
இப்படி ஒரு குடும்பமா?
"ஜனநாயக நாடுகள் அனைத்திற்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள், எந்த நாட்டிலாவது தகப்பன் முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று ஒரே குடும்பம் ஜனநாயகத்தின் பெயரால் இத்தனை பதவிகளை ஆக்கிரமித்து கொண்டு அழுக்கை தின்ற மீன்களை போல, அதிகாரத்தை குதறி தின்கின்ற இதுபோன்ற குடும்பம் ஒன்று உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கிறதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
|
பட்டியல்
இந்த பேச்சைத்தான் தற்போது அதிமுகவினர் வைரலாக்கி வருகின்றனர். அதேசமயம், ஓபிஎஸ் குடும்பத்தினரின் பட்டியலைப் போட்டு திமுகவினர் இதற்கு அதிலேயே பதிலடியும் கொடுத்துக் கொண்டுள்ளனர்.