சாதியை தூக்கி போடுங்கடா.. செத்தா சாதியா கூட வர போகுது.. பொட்டில் அடித்த மாதிரி ஒரு வீடியோ!
சென்னை: "ஏன்டா சாதி பெயரை சொல்லி இப்படி அடிச்சிக்கிறீங்க? இதெல்லாம் தேவையா உனக்கு? சாதியெல்லாம் தூக்கி போடுங்கய்யா.. எந்த காலத்துல இருக்கீங்க எல்லாரும்... இன்னமும் சாதியை ஏன் புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. உழைச்சாதான் நமக்கு சோறு" என்று யதார்த்தத்தை இயல்பாக வெளிப்படுத்தி இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ படுவைரலாகி வருகிறது.
Recommended Video
திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அது ஒரு டிக்டாக் வீடியோ பதிவு.. "உழைத்தால்தான் சாப்பாடு.. ஏன் சாதி பெயரில் அடிச்சுக்கிறீங்க" என்று தலைப்பில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இது ஒரு டிக்டாக் வீடியோ போல தெரிகிறது... அந்த வீடியோவில் 4 இளைஞர்கள் உள்ளனர்.. ஒருவர் மட்டுமே வெற்று உடம்பில் களைத்து போய் பேசுகிறார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:
4 பேர் இருக்கோம்
"பாருங்க.. உழைச்சு காசு சம்பாதிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு பாருங்க.. இங்க 4 பேர் இருக்கோம்.. இந்த 4 பேரும் 3 சாதிக்காரங்க.. ஆனா என்னைக்குமே நாங்க அடிச்சிக்கிட்டதும் இல்லை, சாதி பெயரை சொல்லிக்கிட்டதும் இல்லை.. நீங்க ஏன்டா சாதி பெயரை சொல்லி அடிச்சிக்கிறீங்க? உழைச்சாதான்டா சோறு.. நீ செத்து போயிட்டேன்னு வெச்சுக்கியேன், உனக்கு குழி தோண்டறவன் ஒரு சாதிக்காரனா இருப்பான், உன்னை தூக்கிறவன் 4 பேரும் ஒரு சாதிக்காரனா இருப்பான்? மேளம் அடிக்கிறவன் ஒரு சாதிக்காரனா இருப்பான்.. இதெல்லாம் தேவையா உனக்கு?
சோறு
சாதியெல்லாம் தூக்கி போடுங்கய்யா.. எந்த காலத்துல இருக்கீங்க எல்லாரும்... இன்னமும் சாதியை ஏன் புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. நீ உழைச்சா உனக்கு சோறு.. நான் உழைச்சாதான் எனக்கு சோறு.. இதோபாரு.. ஒரே பாலைவனமா இருக்கு.. இங்கதான் வெயில்ல உழைச்சி வேலை பார்க்கிறோம்.. நாங்க எல்லாருமே டிகிரி முடிச்சிருக்கோம்.
|
பட்டதாரிகள்
எல்லாருமே படிச்சிருக்கோம்.. ஏன்னா வேலை கிடைக்கல.. ஏன்னா நாம எல்லாரும் ஏழைங்க.. சாதியை மட்டும் தூக்கி போடுங்கடா?" என்கிறார். இந்த இளைஞர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் பேசுபவர் கடுமையான விரக்தியும், சோர்வும் அவரது பேச்சில் தெரிகிறது.. சாதியை தூக்கி எறிங்கடா என்று உரிமையாக இவர் சொல்லும் வரிகள் ஏராளமானோரை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
மானமும் - அறிவும்
"மானமும் அறிவும் மனிதருக்கு அழகு" என்று இந்த வீடியோவிற்கு ஒரு கேப்ஷன் தந்து பதிவிட்டுள்ளார் எம்பி செந்தில்குமார். "வாழ்க்கையை உணர்த்திய அனுபவத்தின் வெளிப்பாடு"... என்றும், "புத்தகத்தை படிச்சி பட்டம் வாங்குனவங்களுக்குகூட தெரியமாட்டேங்குதே சார்" ... என்றும் இந்த இளைஞருக்கு ஆதரவான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.