பூச்சி, புழு எல்லாமே கிடக்குது.. இதைத்தான் குடிக்கோணும்.. தண்ணீர்க் கொடுமையின் உச்சம்!
மழை இன்றி, கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
Recommended Video
சென்னை: தண்ணீர்.. தண்ணீர்.... வலிமை உள்ளவர்கள் குடிநீர் பிரச்சனைக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள்!
ஆனால் ஊர் தலைவரை எதிர்த்து நின்று பேச வழியில்லாதவர்கள்? கதி இல்லாதவர்கள்? யாரிடம் என்ன உதவி கேட்பது, எதை கேட்டு பெறுவது என்று தெரியாத பாமரர்கள் என்ன செய்வார்கள்? அப்படிப்பட்டவர்களின் துர்நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் நிலைமையே ஒரு துளி எடுத்து சொல்கிறது இந்த வீடியோ!
இது எந்த ஊர் என்று தெரியவில்லை. அது ஒரு வறண்ட கிராமம். 150 பேர் வசிக்கிறார்கள். அடிப்படை வசதி என்ற அறிமுகமே இல்லாமல், சாலைவசதி, குடிநீர் வசதி அற்று வறண்டு கிடக்கிறது. ஊர் தலைவரையே அதிகமாக இவ்வளவு காலம் நம்பி வாழ்ந்த கிராமம் போல.
அந்த ஊர் தலைவரும் மக்களை கைவிட்டு விட்ட வேதனையில் உள்ளனர். குழாய்களில் குடிநீர் இல்லாமல், அரசாங்கத்தை நம்பி ஏமாந்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே இங்குள்ள குட்டைகளில் நீர் தேங்கும். இப்போது வெயில் வாட்டி வருவதால், ஏதோ ஒரு சின்ன குழியில் ஊறிக் கிடந்த சேற்று நீரை வடிக்கட்டி எடுத்து செல்கிறார் அந்த கிராமத்தை சேர்ந்த பாட்டி ஒருவர். அவரிடம் இளம் பெண் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு யதார்த்தம் கலந்த சலிப்பான பதிலை தருகிறார் அந்த பாட்டி. அவைதான் இவை:
கேள்வி: அம்மணி.. இங்க வந்து ஏன் தண்ணி மொள்ளறீங்க? என்கிறார்.
பாட்டி: என்ன செய்றது.. வீட்ல குடிக்க தண்ணி இல்லை. அதனாலதான் இதை எடுக்க வந்தேன் (ஒரு கிண்ணத்தில் அந்த தண்ணீரை அள்ளி பாத்திரத்தில் ஊற்றுகிறார்) இதுலதான் குடிக்கிறேன்.. இதுலதான் சமைக்கிறேன்.,
கேள்வி: இவ்ளோ அழுக்கா இருக்கே.. இதை எப்படி சமைப்பீங்க பூச்சியெல்லாம் செத்துகிடக்கே, அப்படியேவா குடிப்பாங்க .
பாட்டி: ஆமா என்னத்த பண்றது.. பூச்சி, புழு எல்லாமே கிடக்குது.
கேள்வி: இதை கவர்ன்மென்ட்ல சொன்னாங்களா இல்லையா?
பாட்டி: சொல்றாங்க.. வந்து இதை ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க.
கேள்வி: குடிக்க தண்ணியே இல்லையா?
ஆமா.. எப்பதான் தண்ணி வருமோ.. சுத்தமா தண்ணியே இல்லை வீட்டில. அந்த போர் தண்ணியை குடிக்கவும் முடியல.. ஒரே உப்பு
கேள்வி: இந்த வழியில எப்படி போறீங்க.. என்னமோ பாழடைந்த கட்டிடம் மாதிரி இருக்குதே? மேடு பள்ளமாஇருக்கே.. எப்படி தண்ணி தூக்கிட்டு ஏறி போவீங்க?
பாட்டி: இதுக்கே வழியில்லாம இங்க இப்பதான் வாரேன். யாரும் இந்த மண்ணை அள்ளறது இல்லை.
தண்ணி தூக்கிட்டு போகும்போது மேடும் தெரியாது, பள்ளமும் தெரியாது. கண்ணாடி பாட்டில் எல்லாம் இருக்கும். இப்படியே தூக்கிட்டு போயிடுவேன்" என்று காலில் செருப்பில்லாமல் அந்த மண் பாதையில் தண்ணீர் சுமந்து செல்கிறார்.