ஏ.. கால புடுங்கிறாத ஆச்சீ.. வைரலாகும் க்யூட் குட்டி பாப்பாவின் வீடியோ
பச்சிளம் குழந்தை மீது சிறுமி ஒருத்தி பாசத்தை பொழியும் வீடியோ ஒன்று வைரலாகிறது
சென்னை: பச்சிளம் குழந்தைகள் மீதுதான் மழலைகளுக்கு எவ்வளவு பாசம், அக்கறை? இது சம்பந்தமான சம்பவங்களை நாம் நிறைய பார்த்திருந்தாலும், மேலும் மேலும் அது தொடர்பான செய்திகளை கேட்கும்போதும், பார்க்கும்போதும் ரசிக்கும்படியாகவே உள்ளது!
குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்.. என்ன பேசினாலும் அழகுதான்.. அதிலும் இப்போதுள்ள குழந்தைகள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள். இவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு எந்த பதிலையும் நம்மால் சொல்ல முடியவில்லை.
மழலைகள் செய்யும் சேட்டைகள், திறமைகள் அடங்கிய வீடியோக்களை பலர் பதிவிட்டும் வருகின்றனர். அப்படித்தான் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது எந்த ஊர், யார் என தெரியவில்லை.
ஏ.. கால புடிங்கிறாத ஆச்சீ.. 😂😂😂 pic.twitter.com/87BB1QgnWy
— ♔.. கிங்மேக்கர் ..♔ (@iam_AKfan) June 17, 2019
பொதுவாக குழந்தை பிறந்தால், அதை குளிக்க வைக்க அந்த வீட்டு பெரியவர்கள் (பாட்டிகள் - இதுபோன்ற பாட்டிகளுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி உண்டு) இருப்பார்கள். பச்சிளம் குழந்தையை காலில் போட்டுக் கொண்டு, அதன் கை, கால்களை நீவி விட்டு, இதமான நீரில் குளிக்க வைப்பது இந்த பாட்டிகளுக்கு கை வந்த கலை. எல்லோரும் இப்படி செய்து விட முடியாது.
அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை அந்த வீட்டு பாட்டி ஒருவர் குளிக்க வைக்கிறார். 3 வயசுள்ள ஒரு பெண் குழந்தை இதனை வேடிக்கை பார்க்கிறது. அநேகமாக பிறந்த குழந்தையின் அக்காவாக இருக்கும் போல தெரிகிறது.
பாட்டி, குழந்தையின் காலை பிடித்து நீவி விடும்போது, பதறியே போய்விடுகிறாள் அந்த பெண். "ஏ கால புடுங்கிடாதே ஆச்சீ..." என்று சொல்கிறாள். இதை பார்த்து பாட்டி உட்பட, எல்லோருமே சிரித்துவிடுகிறார்கள். இதுதான் சகோதரப் பாசம் என்பது.. பாட்டிகளுக்கே வார்னிங் கொடுக்கத் தவறாத கியூட் பாசம் இது.