ஆன்லைன், டிவி மூலம் பாடம் நடத்தும் திட்டம்.. கேரளா போல் தமிழகத்திலும் உருவாகுமா மக்கள் இயக்கம்?
சென்னை: கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் இப்போது ஆன்லைன், டிவி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மேற்கொள்ளப்படும் இது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளவும் செய்கிறது.
கேரளாவில் கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் டிவி சேனல் மூலம் பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தம்முடைய வீட்டில் டிவி இல்லாத காரணத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இது கேரளாவையே உலுக்கி எடுத்தது. ஏழை மாணவர்களுக்கு இலவச டிவி, ஸ்மார்ட் போன்கள் வழங்குவதை தனிநபர்கள், பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் ஆகியவை ஒரு மக்கள் இயக்கம் போல முன்னெடுத்து நடத்தினர். இப்போது டிவி சேனல் மூலம் வகுப்புகளை கேரளா அரசு நடத்துவது என்பது சாத்தியமாகி இருக்கிறது.
கருணாநிதி தந்த டிவி
தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி வீடு தோறும் இலவச டிவிக்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். தமிழகத்தில் தற்போது பெரும்பாலான வீடுகளில் டிவி இருக்கத்தான் செய்கிறது. இப்போது கொரோனா லாக்டவுன் காலம். டிவி இருக்கும் வீடுகளில் கேபிள் ஒளிபரப்பு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
உதவிக் கரம்
ஆன்லைன் வகுப்புகள், டிவி சேனல் மூலமான வகுப்புகள் தமிழகத்தில் முழுமையாக சாத்தியாமவது என்பது அரசின் கைகளில் மட்டுமல்ல.. கொரோனா லாக்டவுனால் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த மக்களுக்கு தம்மால் ஆன உதவிகளை உதவிகரங்களை நீட்டி இந்த சமூகம் ஏழை வறியவர்களையும் அரவணைத்தது. கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு களப் பணி செய்தன. நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டதாலே துயரங்களை வரவழைத்துக் கொண்டவர்கள் ஏராளம்.
நிவாரணப் பணிகளில் அடுத்த கட்டம்
இந்த பணிகளின் நீட்சியாக ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான ஆன்லைன், டிவி சேனல் பாட வகுப்புகள் சாத்தியமா? அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் என்ன? என்பதையும் இயக்கங்களும் கட்சிகளும் ஆராய்ந்து உதவினால் பயன்தரக் கூடியதாக இருக்கும். செல்போன் சிக்னல் கிடைக்காத கிராமங்களுக்கு அதற்கான முன்னெடுப்பை கட்சிகளும், இயக்கங்களும் கையில் எடுத்தால்தான் சாத்தியமாகும்.
இதை எல்லாம் செய்யலாம்
ஏழை மாணவர்களுக்கு குறைந்த விலையிலான ஆன்ட்ராய்டு இலவச செல்போன் கொடுக்கலாம், ஆன்லைன் பாடங்கள் நடத்தப்படும் காலத்துக்காக டேட்டா அளவுகளுக்கு பொறுப்பேற்கலாம். டிவி சேனல்களுக்காக கேபிள் கட்டணங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.. சத்துணவு வழங்கி பல கோடி தமிழர்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய தமிழகம், இந்த பெருந்துயர் கால சவால்களையும் எதிர்கொண்டு வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ வேண்டியது காலத்தின் தேவை.