"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்"- மாணிக்கம்தாகூர் எம்.பி.
சென்னை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிமுக ஆட்சி முடிந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். ராஜேந்திரபாலாஜியை பொறுத்தவரை அவர் ஒரு மங்குனி அமைச்சர் என்றும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை பாஜக காப்பாற்றும் என்ற நினைப்பில் அவர் உள்ளதாகவும் கூறினார். பாஜகவை புகழ்ந்து பேசி வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளலாம் என ராஜேந்திரபாலாஜி தப்புக்கணக்கு போடுவதாக விமர்சித்தார்.
அதிமுக ஆட்சி முடிந்தவுடன் 2021-ம் ஆண்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என்றும், அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும், இருக்கும் இடம் தெரியாமல் ஏதாவது ஒரு சிறையில் ராஜேந்திரபாலாஜி தனது காலத்தை கழிக்கவரும் என மாணிக்கம்தாகூர் கூறினார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதானம் தவறி பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வரும் தேர்தலில் சிவகாசி மக்கள் அவரை நிச்சயம் நிராகரிப்பார்கள் எனவும் தெரிவித்தார். ஜெயலலிதா செய்த புண்ணியத்தில்கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ராஜேந்திரபாலாஜி, இப்போது நிதானம் தவறி செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.
பணம் கொடுத்து நாங்குநேரியிலும், விக்ரவாண்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்ற கொள்கையுடன் அதிமுகவினர் இருப்பதாகவும், அதிமுகவின் தோல்வியை ஏற்கனவே மக்கள் உறுதிசெய்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே மதுரையில் எய்ம்ஸ் என்பது மத்திய அரசு விளம்பரத்திற்காக அறிவிப்பு வெளியிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 5 மாதங்களில் எந்தப்பணியும் தொடங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.