ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி புகார்... ஓம் பிர்லாவிடம் மாணிக்கம் தாகூர் மனு
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 21-ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில், காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூரை பன்னிக்குட்டி என்றும், ரப்பர் துப்பாக்கியால் வயிற்றிலேயே சுட வேண்டும் எனவும் பேசினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. மேலும், மாணிக்கம் தாகூரை ஒருமையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு மூலம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்டுள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு அமைச்சர் தன்னை விமர்சித்ததாகவும், அது தமக்கு மிகுந்த மன உளைச்சலை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னையும், தம் குடும்பத்தாரையும் அச்சுறுத்தும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருக்கிறார். மக்களால் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பிரதிநிதியை இப்படி அச்சுறுத்தினால், எப்படி தம்மால் மக்கள் பணியாற்ற முடியும் என வினவியிருக்கிறார். இது குறித்து கவனத்தில் கொண்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பதவிப்பிரமாணம் செய்துகொண்ட போது ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறி ராஜேந்திரபாலாஜி நடந்துகொண்டதாக கூறியுள்ள மாணிக்கம் தாகூர், தமது புகார் மீது நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.