தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம் சீலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அரசு வைத்த சீல் அகற்றப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தில் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்துவிட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால் சிலர் இரண்டு நாட்களுக்கு முன் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஷால் 8 மணி நேரத்திற்கு பின் மாலை விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து ஹைகோர்ட்டில் விஷால் சார்பில் மனு செய்யப்பட்டது.
நேற்றே கூறினார்
நேற்று நீதிமன்றத்தை நாடப்போவதாக விஷால் தெரிவித்து இருந்தார். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன். நான் நீதித்துறையை நம்புகிறேன். காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன் என்று கூறினார்.
முறையற்ற கைது
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்திருந்தார். அதில், தன்னுடைய கைது தவறானது என்று கூறியிருந்தார். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தும் முறையீட்டில் கூறியிருந்தார்.
சீலுக்கு எதிர்ப்பு
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்தது தவறு. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிளை அனுமதிக்காதது சட்டவிரோதமானது. சங்க அலுவலகத்திற்கு முறையின்றி சீல் வைத்து இருக்கிறார்கள். உடனே சங்கத்தின் கதவுகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
விசாரணை முடிவு
இதை இன்று பிற்பகல் ஹைகோர்ட் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் போலீஸாரின் நடவடிக்கை தவறு என்று உத்தரவிட்ட கோர்ட், உடனடியாக சீலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து சங்க அலுவலகத்திற்கு விஷால் உள்ளிட்டோர் சென்றனர். ஏற்கனவே போடப்பட்ட பூட்டை உடைத்து தூக்கி எறிந்தார் விஷால். அதன் பின்னர் நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் சென்றன்ர்.
இப்படியாக 2 நாள் டிராமா நல்லபடியாக முடிவுக்கு வந்தது.